ஆசிபா படுகொலை- கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆர்ப்பாட்டம்
சிறுமி ஆசிபா படுகொலையை கண்டித்து கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடையநல்லூர்: மத்திய பாஜகவை விரைவில் வீட்டிற்கு அனுப்பிவைக்கும் அனைத்து பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருவதாக கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மொஹம்மது அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் சிறுமி படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர், அரசியல் அமைப்பினர், இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே நெல்லை மேற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் மாநில பொது செயலாளரும். கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபுபக்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய பாஜக அரசை கண்டித்தும், சிறுமி ஆசிபாவை கற்பழித்து கொலை செய்தவர்களை தூக்கிலிட கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மனித நேய மக்கள் கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் பேசினார்.
அப்போது, "சிறுமி ஆஷிபா பானு மிகக் கடுமையான வகையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் மத்திய பாஜக ஆட்சிக்கு வந்தபின் 50 சதவிகித சிறுமிகள் மானபங்கம் செய்யப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்து வருகின்றனர். இதற்கெல்லாம் முடிவு கட்டக்கூடிய வகையிலே அனைத்து மதசார்பற்ற கட்சிகள் சார்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.
மத்தியில் இருக்கின்ற பாஜகவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு காங்கிரஸ் சார்பில் மதசார்பற்ற ஆட்சியும் திமுக தலைமையிலான தமிழகத்தில் ஆட்சியும் நாங்கள் ஏற்படுத்துவதற்கான அனைத்து பிரச்சாரங்களையும் செய்து வருகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக மத்தியில் உள்ள பாஜகவிற்கான போராட்டங்கள் தொடரும்" என தெரிவித்தார்.