அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக 151 ஆண்டுகள் கூட இந்தியர்கள் காத்திருக்க வேண்டியிருக்குமாம்
அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்கள் 151 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்
சென்னை: அமெரிக்காவிலேயே நிரந்தரமாக தங்கி வேலை செய்யும் முதுகலை படிப்புக்கு மேல் படித்த சில இந்தியர்கள், அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக 151 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் பொருளாதார ஆலோசனை வழங்கும் அமைப்பு ஒன்று கணக்கிட்டு கூறியுள்ளது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அண்மையில், அமெரிக்காவில் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, வாஷிங்டனிலிருந்து செயல்படும் அரசியல் பொருளாதார ஆலோசனை அமைப்பான கேட்டோ நிறுவனம் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான கிரீன் கார்ட் பெறுவதற்கு காத்திருக்க வேண்டிய கால அளவை புதியதாகக் கணக்கிட்டு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது அமெரிக்காவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கிரீன் கார்டு வழங்கப்பட்ட எண்ணிக்கையைக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் 20 வரை, அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு கிரீன் கார்டு கேட்டு அங்கே வேலை செய்யும் இந்தியர்கள் அவர்களுடைய மனைவி, கணவர், குழந்தைகள் என மொத்தம் 6,32,219 பேர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
அமெரிக்காவில் மிக அதிகமான திறமை உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் அடிப்படையில் இபி-1 பிரிவு குடியுரிமை குறுகிய கால காத்திருப்பில் வழங்கப்படுகிறது.
கேட்டோ நிறுவனம் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி அளித்துள்ள ஒரு தகவலில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறும் மிக அதிக திறமையானவர்கள் 6 ஆண்டுகள் மட்டுமே கிரீன் கார்டுக்காக காத்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளபடி இபி-1 பிரிவில் கிரீன் கார்டு காட்டு 34, 824 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுடன் அவர்களுடைய துணைவர் 48, 754 பேர்களும் குழந்தைகள் 83, 578 பேர்களும் இபி-1 பிரிவில் கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
பட்டப்படிப்பு மட்டும் படித்தவர்களுக்கு அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு வேலை வாய்ப்பு அடிப்படையில் அனுமதி வழங்கப்படுவது இபி-3 கார்டு என்று கூறப்படுகிறது. இபி-3 பிரிவு பட்டதாரி பணியாளர்கள் கிரீன் கார்டு பெறுவதற்கு 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதன்படி, கடந்த ஏப்ரல் 20 வரை கேட்டோ குறிப்பிட்டுள்ள படி இபி-3 பிரிவில் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 54,892 பேர். இவர்களுடன் இவர்களுடைய துணைவர் குழந்தைகள் என 60,381 பேர் கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். ஆகமொத்தம் இபி-3 பிரிவில் கிரீன் கார்டுக்காக காத்திருப்பவர்களின் எண்ணிகை மொத்தம்1,15,273 பேர்களாக உள்ளனர்.
இவை யெல்லாவற்றைக் காட்டிலும், முதுகலைப் படிப்புக்கு மேல் படித்த இந்திய பணியாளர்கள்தான் இபி-2 பிரிவு கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்து குடியுரிமைக்காக பெரிய அளவில் காத்திருக்கின்றனர்.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு வெளியிட்டுள்ள கணக்கின்படி, இபி-2 பிரிவு கிரீன் கார்டு கேட்டு முதல்நிலையில் விண்ணப்பித்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 2,16,684 பேர். இவர்களுடன் அவர்களுடைய துணைவர்கள் குழந்தைகள் என இபி-2 பிரிவில் கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை மொத்தம் சேர்ந்தால் அப்படியே இரண்டு மடங்காக 4,33,368 பேர் கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்து காதிருக்கிறார்கள்.
இப்போது அமெரிக்காவில் இருக்கிற சட்டப்படி ஒரு நாட்டுக்கு 7 சதவிகித அளவே கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் கிரீன் கார்டு கேட்டு முதல்நிலையில் விண்ணப்பித்திருக்கும் இந்தியர்கள் மொத்தம் 3,06,400 பேர். இவர்களுடன் துணைவர், குழந்தைகள் என 3,25,819 பேர் தங்களுடைய கிரீன் கார்டுக்காக காத்திருக்கின்றனர். ஆகமொத்தம் 6,32,219 இந்தியர்கள் அமரிக்காவில் கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
அண்மையில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை வெளிட்ட அறிக்கைப்படி, 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கும் கிரீன் கார்டு இபி-1 பிரிவு இந்திய பணியாளர்கள் 22,602 பேருக்கும், இபி-2 பிரிவில் 2,879 இந்தியர்களுக்கும் இபி-3 பிரிவில் 6,641 இந்தியர்களுக்கும் கிரீன் கார்டு வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
கேட்டோ நிறுவனம் கிரீன் கார்டு வழங்கும் முறை பற்றி குறிப்பிடுகையில், அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்க ஒதுக்கீடு செய்வது என்பது எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையைக்கொண்டு அதற்கு ஏற்றாற்போல வழங்குவது அல்ல. மாறாக மொத்த கிரீன் கார்டு வழங்கும் எண்ணிக்கையில் ஒரு நாட்டைச் சேந்தவர்களுக்கு 7 சதவிகிதம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதன்படி பார்த்தால், அமெரிக்காவில் 2017 ஆம் ஆண்டு வழங்கிய எண்ணிக்கைப்படி ஒவ்வொரு ஆண்டும் கிரீன் கார்டு வழங்கினால் இபி-2 பிரிவில் சில இந்தியர்கள் அடுத்த நூற்றாண்டில்தான் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறமுடியும்.
அதே போல, இபி-3 பிரிவில் கிரீன் கார்டுக்காக 65 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்றும் இது இப்படியே தொடர்ந்தால் சில இந்தியார்கள் 151 ஆண்டுகள் வரை கிரீன் கார்டுக்காக காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்று கேட்டோ நிறுவனம் கூறியுள்ளது.
இதனால், அமெரிக்காவுக்குச் சென்று குடியேறி கிரீன் கார்டு பெற வேண்டும் என்ற பல இந்திய இளைஞர்களின் கனவு கலந்திருக்கிறது.