இந்திரா காந்தி இருந்திருந்தால் தனி தமிழீழ நாடு விஸ்வரூப பாய்ச்சலை காட்டியிருக்கும்!
இந்திரா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாளில் தமிழீழம் அமைய அவர் உதவியதை நினைவூட்டும் பதிவு.
சென்னை: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இருந்திருந்தால் வங்கதேச தனிநாடு உருவானதைப் போல தனித் தமிழீழ தேசமும் உருவாக்கப்பட்டு இந்நேரம் அது தமது பாய்ச்சலை காட்டியிருக்கும் என்பது ஈழத் தமிழர்களின் ஆதங்கம்.
1983-ல் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட போது இந்தியாவே கொந்தளித்தது. தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சிங்கள அதிபர் ஜெயவர்த்தனேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
அப்போது தமிழகத்தில் ஈழத் தமிழர் விடுதலை அமைப்புகள் ஆயுத பயிற்சிகளை மேற்கொண்டிருந்தன. 1983 இனப் படுகொலை சம்பவங்களுக்குப் பின்னர் இந்த பயிற்சி முகாம்களை மத்திய அரசே கையிலெடுக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார்.
ஜெயவர்த்தனேவுக்கு எச்சரிக்கை
அத்துடன் இலங்கையின் திருகோணமலை பகுதியில் அமெரிக்கா காலூன்ற ஜெயவர்த்தனா அனுமதி கொடுத்திருந்தார். ஆனால் இந்திரா காந்தி அம்மையாரோ, நாடாளுமன்றத்திலேயே இலங்கையை பகிரங்கமாக எச்சரித்தார். இந்தியாவின் அனுமதியின்றி இலங்கையில் எந்த் ஒரு வெளிநாட்டையும் அனுமதிக்க கூடாது என கடுமை காட்டினார்.
பேச்சுவார்த்தை
இந்திரா காந்தியைப் பொறுத்தவரை தமிழீழப் போராளிகளுக்கு ஆயுத பயிற்சி கொடுத்து இலங்கை அரசுக்கு நெருக்கடி தருவது; அதேநேரத்தில் தமிழீழ விடுதலை குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளை நடத்துவது என்கிற இரு யுக்திகளை கடைபிடித்தார்.
தமிழீழம் மலரும்
இதனால் வங்கதேசத்தைப் போல நிச்சயம் தமிழீழம் மலரும் என்கிற நம்பிக்கை ஈழத் தமிழருக்கு இருந்தது. ஈழத் தமிழர்களின் உரிமைகள் மீதான கரிசனத்துடன் இந்தியாவின் பாதுகாப்புக்கும் தமிழீழம் அரணாக இருக்கும் என்பதுதான் இந்திரா காந்தி அம்மையாரின் திடமான நம்பிக்கையாக இருந்தது.
இந்திரா படுகொலை
திருகோணமலையைத் தலைநகராகக் கொண்டு தமிழீழ தேசத்தை இந்திரா காந்தி உருவாக்கும் திட்டத்தை வைத்திருந்தார் என்பது வெளிப்படையாகவே இருந்தது. ஆனால் இந்திராவின் வியூகங்களும் நடவடிக்கைகளும் விறுவிறுவென வேகம் காட்டிய சூழலில்தான் 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
ஆட்டுவிக்கும் பொம்மையான பிரதமர்
இந்திரா காந்தி இருந்திருந்தால் இந்த நேரம் தமிழீழ தனிநாடு தம்முடைய விஸ்வரூப பாய்ச்சலைக் காட்டியிருக்கும் என்பதுதான் யதார்த்தம். இந்திரா காந்தி அம்மையாரின் படுகொலைக்குப் பின்னர் இந்திய அரசின் போக்கே திசைமாறிப் போனது. இந்திரா காந்தி அம்மையார் உயிரோடு இருந்தவரை தேசத்தின் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் நபராக பிரதமரே இருந்தார். ஆனால் இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காலத்தில் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் சக்திகளாக அதிகாரிகள் உருவெடுத்தனர். அவர்கள் ஆட்டுவிக்கும் பொம்மையாக பிரதமர் உருமாறிப் போனார். இதனால் ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவுக்கு கசப்பான அனுபவங்கள்தான் கிடைத்தன. இந்திரா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாளை தமிழீழத் தமிழர்கள் ஏக்கப் பெருமூச்சுடன் விடுதலை கனவை சுமந்தபடியே கடக்கும் நிலை உருவாகி இருக்கிறது.