சென்னை-பெங்களூர் காரிடார் திட்டத்தால் ஸ்ரீபெரும்புதூரில் ஏர்போர்ட் வரப்போகிறது: ஜப்பான் அதிகாரி
சென்னை: பெங்களூர்-சென்னை தொழில் காரிடார் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், ஸ்ரீபெரும்புதூரில் புதிதாக ஒரு விமான நிலையம் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜென்சியின் மூத்த அதிகாரி, இசிகுச்சி டொமோஹைட் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று தொடங்கி இன்று நிறைவுற்ற 2 நாள் சர்வதேச முதலீட்டாள் மாநாட்டில் பங்கேற்க வந்த டொமோஹைட் மேலும் கூறியதாவது: சென்னை-பெங்களூர் தொழில் காரிடார் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். அப்படி அறிவித்தால், ஸ்ரீபெரும்புதூரில் கிரீன்பீல்ட் ஏர்போர்ட் அமையும்.
இந்த ஏர்போர்ட் 4800 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. மீனம்பாக்கம் ஏர்போர்ட்டால் 2021ம் ஆண்டுக்கு பிறகு பயணிகளை கையாளுவது கஷ்டமான காரியமாகிவிடும். எனவே ஸ்ரீபெரும்புதூரில் ஏர்போர்ட் வரும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்த ஏர்போர்ட்டுக்கு எங்கள் நிறுவனம் நிதி உதவி செய்கிறதா இல்லையா என்பதை இப்போது கூற முடியாது.
பெங்களூர்-சென்னை காரிடார் திட்டத்தில், சுமார் 20 முதலீடுகளை மேற்கொள்ள எங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.