ஒட்டுமொத்த தொழில்களும் தமிழகத்தை விட்டு வெளியேறினால் என்னாகும்....?
சென்னை: கிட்டத்தட்ட இந்தத் தலைப்பில் உள்ள நிலையை நோக்கி தமிழகம் மெல்ல மெல்ல போய்க் கொண்டிருப்பது போலத்தான் தெரிகிறது. காரணம், தமிழகத்தில் தொழில் சூழல் மோசமாகி வருவதாலும், மின் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருப்பதாலும் பிற மாநில முதல்வர்கள் தமிழக தொழில் நிறுவனங்களை அவர்களது மாநிலங்களுக்கு ஈர்க்க ஆரம்பித்திருப்பதாலும் தமிழகத்தின் தொழில் நிலை மேலும் மோசமடையும் வாய்ப்பு வலுவாகி வருவதாக அஞ்சப்படுகிறது.
தமிழகத்தில் முதலீட்டாளர்கள் நிச்சயம் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இல்லை. இதற்கு முக்கியக் காரணம் மின்வெட்டும், மின்பற்றாக்குறையும்.
தொழில் மாவட்டமான கோவையும், திருப்பூரும் ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போனது. பல மணி நேர மின் தடையால் இந்த மாவட்டங்களின் தொழில்கள் முடங்கிப் போகும் அளவுக்கு நிலைமை இருந்தது.
அதேசமயம், சென்னையிலும், சென்னை அருகே உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்குவதில் அரசு அதிக அக்கறை காட்டியது. ஆனால் சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளில் மின்சாரம் எப்போது வரும் என்பதே தெரியாத நிலைதான் சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்தது.
படையெடுக்கும் வெளி மாநில முதல்வர்கள்
தமிழகத்தை நோக்கி பிற மாநில முதல்வர்கள் அடுத்தடுத்து படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். எங்கள் மாநிலத்துக்கு வாருங்கள் என்று கூப்பிட ஆரம்பித்துள்ளனர்.
கர்நாடகா, ம.பி.
கர்நாடகா மற்றும் ம.பி முதல்வர்கள் கோவைக்கு வந்து தமிழக தொழிலதிபர்களை அங்கு முதலீடுகளைச் செய்யுமாறு அழைத்துள்ளனர். இது கவலை தருவதாக உள்ளது.
நாயுடுவும் வருகிறார்
இந்த வரிசையில் அடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் கோவை வரவுள்ளார்.
மாநிலப் பிரிவினையால் தொய்வு
தற்போது ஆந்திராவில் மாநிலப் பிரிவினையால் அங்கு தொய்வு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யவும்,புதிய தலைநகரில் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் பெருமளவில் முதலீடுகள் தேவைப்படுகின்றன. இதற்கு தமிழக முதலீட்டாளர்களைக் கவர ஆந்திர முதல்வர் முடிவு செய்துள்ளார். இதற்காகவே அவர் கோவை வரவுள்ளார். அதேபோல சென்னைக்கும் ஒரு அமைச்சர் குழு வரவுள்ளது.
பீகாரை விட மோசமான நிலையில் தமிழகம்
ஒரு காலத்தில் பீகார்தான் அனைத்துத் துறைகளிலும் கடைசியில் இருக்கும். ஆனால் இன்று தமிழகம் கடைசி நிலைக்குப் போயுள்ளது. பீகார் முதலிடத்தில் வந்து நிற்கிறது. இதுவும் கவலை தரும் முக்கிய அம்சமாகும்.
சட்டம் ஒழுங்கு கேவலம்
தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பது போல தமிழகத்தில் நிலை உள்ளது. என்னதான் அதிமுகவினர் காவல்துறையினரிடம் வாலாட்ட முடியாது என்று கூறினாலும் கூட அதிமுகவினரின் அராஜகங்கள் குறித்த செய்திகள் வந்தவண்ணம்தான் உள்ளன. மாமூல் கேட்பது, கட்டப் பஞ்சாயத்து சற்றும் குறையவில்லை. அமைச்சர்கள் பலர் மீதே கூட மோசமான புகார்கள் உள்ளன.
சகாயமே சொல்கிறாரே
ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் பதவி காலியாகக் கூட ஒரு அமைச்சர்தான் காரணம் என்கிறார்கள். கோ ஆப்டெக்ஸ் ஊழியரை, அதிமுக பிரமுகர் ஒருவர் ரோட்டில் வைத்து நாயை அடிப்பது போல அடித்ததாகவும், அதை போலீஸார் வழக்குப் போடாமல் தடுக்க அமைச்சர் ஒருவரே முயன்றதாகவும் சகாயம் முதல்வருக்கே கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது.
சட்டம் ஒழுங்கு சரியில்லாவிட்டால் எப்படி
இப்படிப்பட்ட சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள், தொழில்துறைக்குப் போதிய கவனம் கொடுக்காதது, இட வசதி, மின்பற்றாக்குறை என பல காரணங்களால் தமிழக தொழில் துறை நசிந்து போயுள்ளதாக கூறப்படுகிறது.
அமைதி காத்தால் ஆபத்து
இந்த நிலையில் வெளி மாநிலங்கள் தமிழக முதலீடுகளை ஈர்ப்பதைத் தடுக்கும் வகையில் தமிழக தொழில்துறையினருக்கு நம்பிக்கை தரும் வகையில் தமிழக அரசுத் தரப்பில் அதிரடியாக களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்படி எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
குறை கேட்கக் கூட யாரும் இல்லையே
தமிழக தொழில்துறையினரின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்ய அமைச்சர்கள் குழுவோ, அதிகாரிகள் குழுவோ நியமிக்கப்படவில்லை. முதல்வர் கூட இதுகுறித்து அமைதியாகத்தான் இருக்கிறார். இப்படி இருந்தால் எப்படி என்று தொழில்துறையினர் கேட்கிறார்கள்.
சுதாரித்துக் கொண்டால் நல்லது.. இல்லாவிட்டால் போன பின்னர் வருந்தி பிரயோசனம் இல்லை என்பதை மக்களின் கருத்தாக உள்ளது.