மழை நகரமான தலைநகரம்... படகில் ஏறி தப்பிய தொழிலதிபர் ஏ.சி முத்தையா
சென்னை: மழை வெள்ளத்திற்கு தெரியுமா? ஏழை, பணக்காரன் என்று சென்னையில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் அடையாறு ஆற்றங்கரையோர பகுதி மக்களை மட்டுமல்ல பெரும் பணக்காரர்கள் வசிக்கும் போட் கிளப் பகுதியையும் கபளீகரம் செய்துள்ளது. அதேபோல தொழிலதிபர் ஏ.சி.முத்தையாவின் வீடான, அடையார் வில்லாவில் நீர் புகுந்ததால், தண்ணீரில் தவித்த அவரும், அவர் மனைவியும், படகில் ஏறி, தப்பிச்சென்றனர்.
இயற்கைக்கு முன் அனைவரும் சமம் என்று நிரூபித்தது சென்னையின் மழை வெள்ளம். பேரிடருக்கு முன் ஜாதி, மதமில்லை என்பதை நிரூபித்து விட்டது வெள்ளம்.
டிசம்பர் 1ம் தேதி, அடையாற்றில் பெருகிய வெள்ளம் அதிகரித்ததால், கோட்டூர்புரம் பாலத்துக்கு மேற்கு திசையில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பினரை கபளீகரம் செய்தது.
அதே நேரத்தில் கோட்டூர்புரம் பாலத்தின் கிழக்குப்புறத்தில் உள்ள தொழிலதிபர் ஏ.சி.முத்தையா வீடு, கோவை லட்சுமி மில்ஸ் குழுமத்தின் விருந்தினர் மாளிகை, 'பர்ஸ்ட் லீசிங் நிறுவன மேலாண் இயக்குனர் பரூக் இரானி வீடு மற்றும் முன்னாள் கவர்னர் சி.சுப்ரமணியத்தின் வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது.
அடையாறு போட் கிளப் பகுதியில் இருக்கும் அமெரிக்க துாதரக அதிகாரிகள் வீடு, தொழிலதிபர் என்.சீனிவாசன் மற்றும் சன் குழுமத்தின் கலாநிதி, தயாநிதி ஆகியோரின் வீடுகளும் வெள்ளத்தில் சிக்கியது. இவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர்.
ஸ்பிக்' நிறுவன தலைவர் ஏ.சி.முத்தையாவின் வீடான, அடையார் வில்லாவில் நீர் புகுந்ததால், அவரும், அவர் மனைவியும், பங்களாவை காலி செய்து விட்டு படகில் ஏறி, தப்பிச்சென்றனர். வெள்ளம் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே இவர்கள் அனைவரும் தங்களின் இருப்பிடங்களுக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.