ஏதோ ஒரு கருமத்தைக் காட்டி என்னோட டைரி என்பதா.. ஒரே போடாக போடும் சேகர்ரெட்டி!
வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக சொல்லி வெளியிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய டைரி தன்னுடையது அல்ல என்றும் தனக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லை என்றும் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படும் சர்ச்சைக்குரிய டைரி தன்னுடையது அல்ல என்று தொழிலதிபர் சேகர் ரெட்டி கூறியுள்ளார். மேலும் தனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது, தற்போது வெளியாகி இருக்கும் டைரியில் இருக்கும் கையெழுத்து யாருடையது என்றே தெரியாது என்றும் சேகர் ரெட்டி கூறியுள்ளார்.
தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆணடு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவருடைய வீட்டில் இருந்து 178 கிலோ தங்க நகைகளும், ரூ.34 கோடி அளவிற்கு புதிய 2000 நோட்டுகள், ரூ.147 கோடிக்கு பழைய நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. வருமான வரி சோதனையின் போது சேகர் ரெட்டியினி முக்கியமான டைரி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக கடந்த ஓராண்டாகவே செய்திகள் வெளியாகின.
சேகர் ரெட்டியின் அந்த டைரியில் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பெரும்புள்ளிகளுக்கு கொடுத்த பண விவரங்கள் உள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று சேகர் ரெட்டியின் டைரி பக்கங்கள் என்று சிலவற்றை வெளியிட்டுள்ளன. இதனால் சேகர் ரெட்டி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
வாழ்க்கையில் டைரி இல்லை
ஆனால் ஊடகங்களில் வெளியாகியுள்ளது தன்னுடைய டைரியே அல்ல என்று சாதிக்கிறார் சேகர் ரெட்டி. தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் தொலைபேசி மூலம் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது : டைரி எழுதும் பழக்கமே கிடையாது, வாழ்க்கையில் எனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது. தற்போது வெளியாகி இருக்கும் டைரியில் இருக்கும் கையெழுத்து யாருடையது என்றே தெரியாது.
என்னுடைய கையெழுத்தல்ல
நான் ஏன் அமைச்சர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். என்னுடைய வியாபாரம் போக்குவரத்து, உள்கட்டமைப்பு சார்ந்தது நான் ஏன் அவர்களுக்கு பணம் கொடுக்கப் போகிறேன். ஏதோ ஒரு கருமத்தை காட்டி என் டைரி என்கிறார்கள், அதில் இருப்பது என்னுடைய கையெழுத்தே அல்ல. நான் கையெழுத்தை ஒப்பிட்டு பார்ப்பதற்கு இன்றே தயாராக இருக்கிறேன். பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளட்டும்.
போக்குவரத்து தொழில்
நானோ என்னுடைய நிறுவனமோ எந்த மணல் கான்டிராக்ட்டையும் எடுத்ததில்லை. மணல் எடுப்பது 15 ஆண்டுகளுக்கு முன்பே அரசின் வசம் சென்றுவிட்டது அப்படி இருக்கும் போது எப்படி நான் மணல் ஒப்பந்தத்தை பெற முடியும். எனக்கு சொந்தமாக 400 லாரிகள், 300 பொன்லைன் எந்திரங்கள் உள்ளன, இந்தியா முழுவதும் சாலை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறேன்.
முறையாக வரி கட்டுகிறேன்
என்னுடைய வீட்டில் நகையோ, பணமோ இருந்ததில் தவறில்லை. யாரும் நகை, பணத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்று சட்டம் இல்லை. நான் முறையாக வரி கட்டுகிறேன். ஆண்டுக்கு நானும் என் சார்ந்த நிறுவனங்களும் சுமார் 100 கோடி அளவிற்கு வரி மட்டுமே கட்டுகிறோம், நாங்கள் ஏன் ஏமாற்றப் போகிறோம். என்னுடைய பணம் அனைத்தும் நியாயமாக சம்பாதித்தது, இதில் கறுப்புப்பணம் என்பதே கிடையாது.
இரண்டே முறை தான் பார்த்திருக்கிறேன்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எனக்கு பழக்கம் கிடையாது. விஐபிகள் யார் கோவிலுக்கு வந்தாலும் அப்போது நான் அங்கு இருந்தால் அவர்களை வரவேற்பேன். அப்படித் தான் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது அதை வைத்து நானும் அவரும் நண்பர்கள் என்று சொல்லி விட முடியாது. இரண்டே முறை தான் நான் அவரை பார்த்திருக்கிறேன்.
ஒப்பந்தத்திற்கு உதவியதில்லை
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் என்னுடைய குடும்ப நண்பர் அதைத் தவிர அவர் எனக்கு டெண்டரில் எந்த உதவியும் செய்ததில்லை. நான் குளோபல் டெண்டர் தான் எடுக்கிறேன் யார் வேண்டுமானாலும் அதை எடுக்கலாம். ஒரு ஒப்பந்தம் என்பது சட்ட முறைப்படி நடப்பது அதை எப்படி ஒரு அதிகாரி தனக்கு சார்ந்தவருக்கு ஒதுக்க முடியும் என்றும் சேகர் ரெட்டி கூறியுள்ளார்.