சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சேகர் ரெட்டி மீண்டும் கைது.. மார்ச் 28 வரை சிறைக் காவல்
அமலாக்கத்துறை விசாரணையை அடுத்து சேகர் ரெட்டி உள்பட அவரது கூட்டாளிகள் 3 பேர் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாமினில் வெளியே வந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி, சீனிவாசலு மற்றும் பிரேம்குமார் உள்ளிட்ட மூவரும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரையும் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக போயஸ் இல்லத்திற்கு நெருக்கமானவராக அறியப்படும், தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிபிஐ கைதுசெய்தது.
சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் கடந்த 17ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தனர். இந்நிலையில், இன்று திடீரென சேகர் ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ளது அமலாக்கத்துறை அலுவலகம். இங்கு சேகர் ரெட்டியை வரவழைத்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் 10 மணிநேர விசாரணைக்கு பின்னர் சேகர் ரெட்டியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். மேலும், சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் எழும்பூர் 13வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மூவரையும் வரும் 28 ஆம் தேதி வரை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.