பயனற்று போன கோவையின் புதிய காந்திபுரம் மேம்பாலம்.. ஓயாத வாகன நெரிசலால் தவிக்கும் மக்கள்!
புதிய காந்திபுரம் மேம்பாலத்தினால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
Recommended Video
கோவை: கோவையில் புதியதாக கட்டி திறக்கப்பட்ட காந்திபுரம் மேம்பாலத்தினால் போக்குரத்து நெரிசல் சற்றும் குறையாததால் எந்த பயனும் இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த மேம்பாலத்தை உடனடியாக மறு வடிவமைப்பு செய்ய திட்டமிட்டு உள்ளதால் பல கோடி ரூபாய் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகரின் முக்கிய பகுதியாக விளங்கும் காந்திபுரம் சந்திப்பு மற்றும் நூறடி ரோடி சந்திப்பு ஆகிய பகுதிகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இந்த பகுதிகளில் மேம்பாலம் கட்டலாம் என கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக-வால் அறிவிக்கப்பட்டது.
சுரங்கப்பாதையுடன் கூடிய இரண்டடுக்கு பாலம், ரவுண்டாவுடன் கூடிய பாலம் என பல்வேறு திட்டங்கள் போடப்பட்டு இருந்த சூழலில், அந்த திட்டத்தை முற்றிலும் மாற்றி இறுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு 160 கோடி ரூபாயில் இரட்டை அடுக்கு பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவங்கியது.
வெறிச்சோடிய போக்குவரத்து
இந்நிலையில் முதல் அடுக்கான நஞ்சுசப்பா சாலையில் இருந்து சத்தி ரோடு ஆம்னி பேருந்து நிலையம் வரை மேம்பாலம் கட்டும் பணி முடிவடைந்து கடந்த சில நாட்களுக்கு முன் மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது . மேம்பாலம் கட்டப்பட்டுள்ள இடைப்பட்ட இடங்களில் வெளியூர் செல்ல கூடிய பேருந்து நிலையம், உள்ளூர் பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம் மற்றும் வணிக கூடங்கள் உள்ள கிராஸ்கட் சாலை அமைந்துள்ளன. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த கூடிய இடங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் மேம்பாலத்திற்கு அடியில் இருக்கும் சூழலில், மேம்பாலத்தை பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் மேம்பாலத்தில் போக்குவரத்து என்பது எப்பொழுதும் வெறிச்சோடி காணப்படுகிறது
பல கோடி ரூபாய் முறைகேடு
மேம்பாலம் கட்டப்பட்டும் காந்திபுரம் பகுதியில் சற்றும் கூட போக்குவரத்து நெரிசல் என்பது குறையாமலேயே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் போதிய திட்டமிடல் ஏதும் இல்லாமல் இந்த மேம்பாலம் கட்டப்பட்டதால் தற்போது பல கோடி ரூபாய் வீணாகி உள்ளதாக குற்றச்சாட்டு வைத்து உள்ளனர். திட்டமிடாமல் கட்டப்பட்ட மேம்பாலத்தினால பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்று இருக்கும் என குற்றச்சாட்டு வைத்து உள்ளனர்.
உருவாகும் சூசைடு பாயிண்ட்?
இந்த மேம்பாலமே தற்போது பயனற்று போய் உள்ள நிலையில், இதேபோல மேம்பாலத்தின் இரண்டாம் அடுக்கானது நூறடிசாலை 5 வது வீதியில் இருந்து, சின்னசாமி சாலை மின் மாயானம் வரை அமைக்க திட்டமிடப்பட்டு கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மிகவும் குறுகலான இந்த பாலம், முதல் அடுக்கு மேல்பாலத்தின் மேல் செல்ல உள்ளது. மிகவும் குறுகலாகவும் உயரமாகவும் உள்ளதால் இந்த பாலத்தில் செல்ல வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த மேம்பாலம் ஒரு சூசைடு பாயிண்ட்டை போல உருவாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பல கோடி ரூபாய் செலவில் மக்களுக்கு பயனளிக்காத வகையிலும், ஆபத்தான நிலையிலும் இந்த மேம்பாலம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பல கோடி ரூபாய் வீணாகும் நிலை
இந்த கருத்துக்கள் அதிகாரிகளுக்கு சென்ற நிலையில் தற்போது இந்த மேம்பாலத்தை மறு வடிவமைப்பு செய்ய முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். ஏற்கனவே திட்டமிட்டு கட்டப்படாத மேம்பலத்தினால் தற்போது மறு வடிவமைப்பு செய்து மீண்டும் பாலத்தை மாற்றி அமைத்தால் பல கோடி ரூபாய் வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் பொதுமக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையிலாவது இனி மேம்பாலத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். காந்திபுரம் மேம்பாலத்தை மறு வடிவமைப்பு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த பணிகளை விரைந்து துவங்கினால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.