தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகள் உடல் நிலையில் முன்னேற்றம்: டீன்
தர்மபுரி: தொடர் உயிரிழப்புகளால் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள 4 குழந்தைகளும் நலமாக உள்ளதாக மருத்துவமனை டீன் டாக்டர் நாராயண பாபு தெரிவித்தார்.
கடந்த 14ம்தேதி முதல் 17ம்தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் 11 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து சேலம் உள்ளிட்ட பிற நகர மருத்துவமனைகளுக்கு குழந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. தர்மபுரி மருத்துவமனையில் தற்போது 4 குழந்தைகள் குழந்தைகளுக்கான ஐசியூவில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களின் நிலை குறித்து மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் நாராயண பாபு அளித்த பேட்டி:
தர்மபுரி மருத்துவமனையில் உள்ள 4 குழந்தைகளுக்கு மூச்சு திணறல் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவை அனைத்தும் சமீபத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் என்பதால் குழந்தைகளுக்கான ஐசியூவில் வைக்கப்பட்டுள்ளன. வென்டிலேட்டர் மற்றும் இன்குபேட்டர் ஆகிய வசதிகள் நான்கு குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. சிகிச்சையை குழந்தைகளின் உடல் ஏற்கத் தொடங்கியுள்ளது. இன்னும் 24 மணி நேரம் அல்லது 32 மணி நேரத்திற்குள் குழந்தைகள் வென்டிலேட்டரில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு வழக்கமான வார்டில் தங்க வைக்கப்படுவார்கள். இவ்வாறு நாராயண பாபு தெரிவித்தார்.