உயிரிழக்கும் முதியவர்கள்.. மாயமாகும் எலும்புக்கூடுகள்.. கருணை இல்லத்தில் புதைந்திருக்கும் மர்மம்!
காஞ்சிபுரம் அருகே செயல்பட்டு வரும் கருணை இல்லம் குறித்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
காஞ்சிபுரம்: பாலேஸ்வரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லம் குறித்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருணை இல்லத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும் அவர்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஆதரவற்ற முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த கருணை இல்லத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து போலீஸிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
ஆம்புலன்ஸில் அலறல்
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு அருகே சாலவாக்கத்தில், ஆம்புலன்ஸ் போல வடிவமைக்கப்பட்ட டாடா ஏஸ் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதிலிருந்து ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என்ற அலறல் சத்தம் கேட்டது. உடனே அப்பகுதியில் சென்றவர்கள் அந்த வேனை மடக்கிப்பிடித்தனர்.
பிணம் ஒன்று கடத்தல்
அந்த வேனில் திண்டுக்கல்லை சேர்ந்த செழியன், திருவள்ளூர் பகுதியை சேர்ந்த கண்ணம்மாள் என்ற 2 முதியவர்கள் இருந்தனர். அந்த 2 பேரும் வேனில் பிணம் ஒன்று இருப்பதாக கூறியதன் பேரில் அந்த வேனை மக்கள் சோதனை செய்தனர்.
சடலம் அருகே முதியவர்
அப்போது வேனில் காய்கறிகளுடன் ஒரு ஆண் பிணமும் இருந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சடலத்துக்கு அருகே முதியவர் ஒருவர் படுக்க வைக்கப்பட்டிருந்தார்.
அடக்கம் செய்யப்படுகிறதா?
செயிண்ட் ஜோசப் கருணை இல்லத்தின் சமையலுக்கான காய்கறி மூட்டைகளுடன் சடலம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. வெளி நாட்டில் இருந்து வரும் நிதியை கொண்டு நடத்தப்படும் இந்த தொண்டு நிறுவனத்தில் மரணம் அடையும் முதியவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதில்லை என கூறப்படுகிறது.
தொட்டிக்குள் வைக்கப்படும் உடல்கள்
மாறாக சுவர்களில் கல்லறை போன்று அமைக்கப்பட்ட அறைகளில் உடல்கள் வைக்கப்பட்டு, சில நாட்கள் கழித்து அவர்களது எலும்புகளை எடுத்து பதப்படுத்தி அதனை வெளிநாடுகளுக்கு கடத்துவதாக கூறப்படுகிறது. மருந்து தயாரிப்பதற்காக சட்டவிரோதமாக எலும்புகள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
3 மாதத்தில் 300 பேர் பலி?
இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த 3 மாதங்களில் இந்த கருணை இல்லத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் அவர்கள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.