சிங்கிள் டீ சாப்பிட்டு, இரவு பகல் பாராமல் பணியாற்றிய போலீசார்: இன்போசிஸ் ஹெச்.ஆர். உருக்கம்
சென்னை: சுவாதி கொலையாளியை கைது செய்ய போலீசார் பட்ட கஷ்டங்களை உடன் இருந்து பார்த்த இன்போசிஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி (ஹெச்.ஆர்.) சுஜித் குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் விவரித்துள்ளார்.
போலீசார் பட்ட கஷ்டங்களையும், அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், பாராட்டியுள்ளார் சுஜித் குமார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட சுவாதி இன்போசிஸ் சாப்ட்வேர் இன்ஜினியர் என்பதால், சக ஊழியர்களிடம் விசாரணை நடத்த சுஜித்குமாரின் உதவியை பெரிதும் நம்பியிருந்தனர் போலீசார்.
இதுகுறித்து, சுஜித் குமார் சொல்லியுள்ளதை பாருங்கள்: கடந்த 5 நாட்களாக நான் தினமும் 15 மணி நேரமாவது போலீசாருடன் செலவிட்டேன். ஆனால், போலீசார் பட்ட கஷ்டத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் எங்களுடைய கஷ்டம் ரொம்ப கம்மி.
திறமையான போலீசார்
போலீசாரின் விசாரணையை பார்த்து நான் வியந்துள்ளேன். இந்த வழக்கை விசாரிக்க குறிப்பிட்ட சில திறமையான போலீசாரை தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தனர். அந்த போலீசாரின் அர்ப்பணிப்பு மற்றும் பொறுமையை பார்த்து நான் வியந்துள்ளேன்.
சிறு தடயங்கள்
போலீசாரின் ஒரே குறிக்கோள், இந்த வழக்கில் கிடைக்கும் சிறு சிறு தடயங்களையும், ஆதாரங்களையும் சேகரிப்பதாக மட்டுமே இருந்தது. சாட்சியங்களை பேச வைக்க அவர்கள் செய்த முயற்சிகள் அபாரம்.
அவமானமாக நினைத்தனர்
விசாரணை அதிகாரிகள் பலரும், இந்த கொலையை, தங்களுக்கு நேர்ந்த அவமானமாகவே கருதி பணியாற்றினர். ஒரு நாள் இரவு 1 மணியிருக்கும். போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் இப்படி கூறினார். "சர்.. ஆயுதம் இன்றி நிராயுதபாணியாக நின்ற ஒரு பெண் பிள்ளை மீது அரங்கேற்றப்பட்ட கொடூர கொலை இது. என்ன விலை கொடுத்தாவது கொலையாளியை நாங்கள் பிடித்தே தீர வேண்டும். அல்லது, பொதுமக்கள், அச்சத்தோடே வாழ வேண்டி வரும். அதிலும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இது பீதியை ஏற்படுத்திவிடும்" என்றார்.
சிங்கிள் டீ
எங்கள் ஆபீசில் வேலை பார்ப்போர் மதியம் அல்லது இரவு சாப்பாட்டுக்கு கேபினை விட்டு வெளியே செல்லும்போது, போலீசார் ஓடிவந்து அவர்களிடம் பேச்சு கொடுத்து, சுவாதி பற்றி விசாரிப்பார்கள். பல நேரங்களில், போலீசார் ஒரு கப் காபியோ, டீயோ மட்டுமேதான் குடித்து வேலை பார்த்ததை பல நேரங்களில் பார்த்துள்ளேன்.
இரவு பகல் பாராமல்
நள்ளிரவில் கூட ஆய்வு மீட்டிங் இருக்கிறது என்பார்கள். காலையிலேயே அடுத்தகட்ட விசாரணைக்கு போலீசார் தயாராக இருப்பார்கள். நேற்று இரவு நான் வீட்டுக்கு திரும்பி டிவி பார்த்தபோது, சுவாதி கொலையாளி பிடிபட்டதாக பிரேக்கிங் செய்தி பார்த்தேன். ஒரு அதிகாரிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அது உண்மையா என கேட்டேன். சில நிமிடங்களிலேயே 'யெஸ் சார்' என பதில் வந்தது. நிம்மதியாக தூங்கினேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக போலீசாருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.