"அம்மா திமுக" ஆரம்பித்தார் இளங்கோவன் தம்பி இனியன் சம்பத்.. தாங்குமா தமிழகம்!
ஜெயலலிதா காலமானதையடுத்து அந்தக் கட்சியைச் சேர்ந்த இனியன் சம்பத் ‘அம்மா திமுக’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
சென்னை: எத்தனை கட்சிகளைத்தான் தமிழகம் தாங்கும். ஜெயலலிதா இறந்த பிறகு பேரவைகளும், கட்சிகளும் புதிது புதிதாய் முளைத்து வருகின்றன. அதிமுகவில் புதிதாக வரவிருக்கும் தலைமையை ஏற்க விரும்பாமல் 'அம்மா திமுக' என்ற புதிய கட்சியை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தம்பி இனியன் இளங்கோ தொடங்கியுள்ளார்.
ஜெயலலிதா கடந்த 5ம் தேதி உடல் நலமின்றி உயிரிழிந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி அதிமுகவில் எழுந்த நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள், தலைவர்கள், ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாதான் அடுத்த பொதுச் செயலாளர் என்று அறிவித்தனர். சசிகலாதான் பொதுச் செயலாளர் என்று இன்னும் முறையாக அறிவிக்கப்படாத நிலையில், இதற்கு கடுமையான எதிர்ப்பு அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனையடுத்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பெயரில் ஜெ.தீபா பேரவை என்ற அமைப்பை சேலம் அதிமுக தொண்டர்கள் தொடங்கி சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து நேற்று 'அம்மா திமுக' என்ற புதிய கட்சி உதயமாகியுள்ளது.
அதிமுகவின் முக்கிய பொறுப்புக்களை வகித்து மறைந்து போன சுலக்ஷனா சம்பத்தின் மகனும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தம்பியுமான இனியன் சம்பத், கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். இந்நிலையில் திடீரென ஜெயலலிதா மறைவு சம்பவம் நடந்துவிட்டதால் எம்.ஜி.ஆர் நினைவு தினமான நேற்று 'அம்மா திமுக' என்ற கட்சியை இனியன் சம்பத் தொடங்கியுள்ளார்.
தமிழக அரசியல் கட்சிகளில் எம்.ஜி.ஆர். தனது நிலைப்பாட்டில் இம்மியளவும் மாறாமல் உறுதியாக இருந்து அரசியல் அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தார். அந்தத் திசை வழியில் செல்வதற்காக தொண்டர்களை ஒருங்கிணைத்து இந்த இயக்கத்தை உருவாக்கியிருக்கிறேன் என்று இனியன் சம்பத் கூறியுள்ளார்.
மேலும், கட்சியின் பொறுப்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கூறிய இனியன் சம்பத் தனது இல்லத்தையே கட்சி அலுவலகமாக மாற்றி, கட்சியின் பெயர்ப் பலகையையும் வைத்துள்ளார்.