மீட்கப்பட்ட காகம் குளுக்கோஸ் சாப்பிட்டுத் தேறுகிறது.. நாளை பறக்குமாம்!
சென்னை: மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தோருக்கு நேற்று வித்தியாசமான ஒரு அனுபவம் கிடைத்தது.
ஒரு காகம் மயங்கிப் போய் காயமடைந்த நிலையில் இடிபாடுகளுக்குள் இருந்தது. அதை அப்படியே விட்டு விடாமல் பத்திரமாக மீட்டு இப்போது உயிர் பிழைக்கவும் வழி வகுத்துள்ளனர் மீட்புப் படையினர்.
தற்போது அந்த காகத்தை ப்ளூகிராஸ் அமைப்பினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மீட்புப் பணி
மவுலிவாக்கத்தில் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றி சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
காயமடைந்த காகம்
இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியுள்ளனரா என்பது குறித்து மீட்புப் படையினர் பார்த்தபோது ஒரு காகம் காயமடைந்து மயங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்தனர்.
காகம்தானே என்று விட்டு விடாமல்
இதையடுத்து அந்த காகத்தையும் மீட்புப் படையினர் பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். முதலில் அதற்குத் தண்ணீர் தரப்பட்டது. அதற்கு உயிராபத்து இல்லை என்று தெரிந்தது.
ப்ளூகிராஸ் வந்தது
காகம் சிக்கியது குறித்து ப்ளூ கிராஸ் அமைப்புக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து காகத்தைப் பெற்றுச் சென்றனர்.
குளுக்கோஸ், பால், ரொட்டி
காயமடைந்த காகத்திற்கு க்ளூக்கோஸ், பால், ரொட்டி தந்து காக்கப்படும் என்று ப்ளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
காகத்திற்கு உடல் நலம் தேற 1 மாதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
காகம் பத்திரம்
இது குறித்து புளூ கிராஸ் இந்தியா அமைப்பின் பொது மேலாளர் டான் வில்லியம்ஸ் கூறுகையில், இடிபாட்டில் சிக்கிய காகம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் புளூ கிராஸுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காகத்துக்கு முதலுதவி அளித்தோம்.
வாயில் பசை ஒட்டியதால் வாய் திறக்க முடியவில்லை
காகத்தின் உடம்பில் சிறு காயங்கள் உள்ளன. காகத்தின் வாயில் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் பசை ஒட்டிக்கொண்டதால் காகத்தால் வாய் திறக்க முடியவில்லை. ஸ்பிரிட் மூலம் காகத்தின் வாயில் ஒட்டிக்கொண்ட பசை அகற்றப்பட்டது.
ஊசி மூலம் குளுக்கோஸ்
மேலும் காகத்துக்கு ஊசிமூலம் வாய் வழியாக குளுக்கோஸ் செலுத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாளை காகம் பறக்கும் என எதிர்பார்க்கிறோம்.
2 நாய்களும் மீட்பு.. நலம்!
இதேபோல திங்கள்கிழமை மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்ட 2 நாய்கள் தற்போது நலமாக உள்ளன. காகம் மற்றும் நாய்களை மீட்க உதவிய மீட்புக் குழுவினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.