தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்
சென்னை: வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்,
கடந்த 4 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம்.
கடல் காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வரை வீசும் என்பதால் மீன் பிடிக்க செல்லும்போது மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தென்மேற்கு பருவமழை காலமான இந்த தருணத்தில் கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் சராசரியை விட அதிகமாக மழை பெய்துள்ளது என்றனர்.