ரேஷன் கார்டுக்கு வந்த சோதனை.. மேலும் ஓராண்டுக்கு 'உள்தாள்' - தமிழக அரசு
ரேஷன் கார்டுகளில் மேலும் ஓராண்டுக்கு உள்தாள் ஒட்டப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் மக்கள் பயன்படுத்தும் ரேஷன் கார்டுகளில் மேலும் ஓராண்டுக்கு உள்தாள் ஒட்டப்படும். தற்பொழுதுள்ள ரேஷன் கார்டுகளின் காலம் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் உணவு வழங்கல் துறையின் மூலம் குடும்ப வருவாய்க்கு ஏற்ப 2005 ஆம் ஆண்டு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. இதன் ஆயுட்காலம் 2009 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. பயோ மெட்ரிக் ரேஷன் கார்டுக்காக 2010 இல் இணைப்புத்தாள் வழங்கப்பட்டது. 2012ல் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி முடிவடைந்ததும், அதைக்கொண்டு பொதுமக்களின் விரல் ரேகை, விழிகள் பதிவு செய்து பயோ மெட்ரிக் கார்டாக 2013 இல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஓராண்டுக்குப் பயன்படுத்தும் வகையில் இணைப்புத்தாள் வழங்கப்பட்டது. அந்த இணைப்புத்தாளும் 2014 ஆம் ஆண்டோடு முடிந்தது. இருப்பினும் புதிய ரேஷன் கார்டு வழங்காமல் தற்போது வரை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் பயன்படுத்தும் ரேஷன் கார்டுகளில் மேலும் ஓராண்டுக்கு உள்தாள் ஒட்டப்படும். தற்பொழுதுள்ள ரேஷன் கார்டுகளின் காலம் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அச்சிடப்பட்ட உள்தாள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.