தேனியில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக களமிறங்கிய மேதாபட்கர், வைகோ
தேனி: நியூட்ரினோ ஆய்வை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்று ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, தேசிய மக்கள் இயக்க தலைவர் மேதாபட்கர் ஆகியோர் கூறியுள்ளனர்.
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக சமூக ஆர்வலர் மேதா பட்கருடன் இணைந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.
தேனி மாவட்டம் போடியை அடுத்த பொட்டிப்புரம் அம்பரப்பர் மலைப் பகுதியில் அமைக்கப்பட உள்ள நியூட்ரினோ ஆய்வுக் கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றனர்.
நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம்
இந்நிலையில் நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பின் சார்பில் நியூட்ரினோவிற்கு எதிரான பிரச்சாரம் போடி பகுதியில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஆண்டிபட்டி, தேனி, போடி அருகே உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, நாகலாபுரம், திம்மிநாயக்கன்பட்டி, பொட்டிப்புரம், ராமகிருஷ்ணாபுரம், டி.புதுக்கோட்டை ஆகிய கிராமங்களில் பிரச்சாரம் நடைபெற்றது.
வைகோ - மேதாபட்கர்
பிரச்சாரத்தில், வைகோ, சமூக சேவகி மேதாபட்கர் மற்றும் நியூட்ரினோ எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் கே.எம்.அப்பாஸ், லெனின் இராஜப்பா, திருமுருகன் காந்தி, கி.வே.பொன்னையன், முகிலன், சந்திரன், இளையரசு ஆகியோர் பங்கேற்றனர்.
மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் நியூட்ரினோ திட்டத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதிப்பு
இதில் பல்வேறு இயக்க பொறுப்பாளர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தால், தேனி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகும் என்று சமூக ஆர்வலர் மேதா பட்கர் தெரிவித்தார்.
கதிர்வீச்சு அபாயம்
மேலும் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் என்றும், இந்த இடம் அணுக்கழிவை கொட்டும் இடமாக பயன்படுத்த நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகளின் வாழ்வாதாரம்
பின், மதுரை செக்கானுாரணி, உசிலம்பட்டி, தேனியில் இதை வலியுறுத்தி பேசினர்.தேனியில் மேதா பட்கர் பேசுகையில், ''வெளிநாட்டினர் ஆய்வுக்காக இங்குள்ள விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டுமா'' என்றார்.
பாறைகளை உடைக்க
வைகோ பேசுகையில், ''மேற்கு தொடர்ச்சி மலையை ஐ.நா., அமைப்பு பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. ஆய்வு திட்டத்திற்கு பாறைகளை உடைக்க ஒரு லட்சம் டன் ஜெலட்டின் வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன'' என்றார்.
சுற்றுச்சூழல் பாதிப்பு
தேனி மாவட்டத்தில் அமையும் நியூட்ரினோ ஆய்வு மையத்தால் சுற்றுச்சூழல், நீர் நிலைகள் பாதிக்கும். நியூட்ரினோ ஆய்வு என்பது அணுசக்தி ஆய்விற்கு சமம்.இந்த ஆய்விற்கு மத்திய அரசு சட்ட, அறிவியல்பூர்வமாகவும் எந்த அனுமதியும் பெறவில்லை. காவிரி படுகையில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் இணைந்து பல போரட்டங்களை நடத்தினோம்.
போராட்டம் தொடரும்
அதுபோல் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார். நியூட்ரினோ ஆய்வை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்று இருவரும் இணைந்து வலியுறுத்தினர்.