நெல்லை மாவட்டத்தில் கடற்படை வார விழா - 29ந் தேதி சாகச நிகழ்ச்சி!!
நெல்லை: இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் கிராமத்தில் கடற்படை சாகச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆண்டுதோறும் டிசம்பர் 4ந் தேதி கடற்படை தினம் கொண்டாடுப்படுகிறது. இதை ஒரு வாரம் காலம் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.
இந்திய கடற்படையின் தென்பகுதி கண்காணிப்பு மையம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து 14 கிமீ தொலைவில் விஜயநாராயணம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் தொடர்பு நிலையம் பாளையங்கோட்டையில் உள்ளது.
ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை மையம் சார்பிலும் கடற்படை வார விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கடற்படை வார விழாவை முன்னிட்டு வரும் 23ந் தேதி காலை நாகர்கோவில் கிருஷ்ணகுமார் எலும்பு முறிவு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
சிறப்பு நிகழ்ச்சியாக வரும் 29ந் தேதி விஜயநாராயணம் ஐஎன்எஸ் கட்டபொம்மன் வாளகத்தில் கடற்படை ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கடற்படை கப்பல்கள் மாதிரிகள், கண்காட்சிகள் போன்றவையும் நடைபெறுகின்றன. இதனை பார்வையிட பள்ளி, கல்லூரிகளுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு வந்து விமான, ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சியை பார்வையிடலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.