நெல்லை அருகேயுள்ள மலைப்பகுதியில் விமானப்படைத் தளமா? - அதிகாரிகள் ஆய்வு
நெல்லை: நெல்லை அருகே பாதுகாப்பை உறுதி செய்ய விமானப்படை தளம் அமைக்கப்படும் என தெரிகிறது. இதற்காக அதி நவீன மொபைல் ரோடார்கள் சோதனை செய்து வருகின்றன.
நெல்லை மாவட்டம் நாட்டின் பாதுகாப்பு கேந்திரத்தின் முக்கியத்துவத்தில் இருந்து வருகிறது. பணங்குடி அருகே இஸ்ரோ திரவ எரிபொருள் உந்துதல் மையம் இருக்கிறது. இந்த மையத்தில் இஸ்ரோவின் இருந்து ஏவப்படும் ராக்கெட் கிரியோஜெனிக் என்ஜின்கள் தயாரிப்பு மற்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் என்ஜின்கள் தான் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டு ராக்கெட்டில் பொருத்தப்பட்டு ஏவுப்படுகிறது.
இது மிகுந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால் அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர கூடங்குளம் அணுமின் நிலையம், விஜயநாராயணம் கடற்படை தளம், தூத்துக்குடி துறைமுகம், கூடங்குளத்திற்கு பயன்படுத்தப்படும் கனநீர் ஆலை போன்றவை இயங்கி வருகின்றன.
கூடங்குளம் மற்றும் இஸ்ரோ மையம் அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது. இதில் கடந்த ஆண்டு டிசம்பர் 12, 13-ம் தேதிகளில் இஸ்ரோ மையத்தை சுற்றி ஆளில்லாத சிறிய அளவிலான கிளைடர் விமானம் பறந்ததாக கூறப்படுகிறது.
இதுக்கு வலு சேர்ப்பது போல இஸ்ரோ மைய மலைப்பகுதியில் வைபை சிக்னல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் வெளியானதால் அப்பகுதியில் நெல்லை மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். கிளைடர் விமானம் பறந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இஸ்ரோ, கூடங்குளம் பகுதியில் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக புகார் எழுந்தது.
இலங்கை மாலத்தீவு கடற்பகுதிகளில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த கப்பல்கள் அடிக்கடி வந்து செல்வதாக உளவுத்துறையினர் மத்திய அரசை உஷார்படுத்தினர். இந்த பகுதிகளில் உளவு விமானங்களை கண்காணிக்க அதி நவீன ரேடார் வசதிகள் இல்லாதது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் விமானப்படைக்கு சொந்தமான ஐந்து அதிநவீன மொபைல் ரோடார் வாகனங்கள் வந்தன.
அங்கு இரு நாட்கள் ரோடார் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மீண்டும் அதிகாரிகள் ஆய்வில் இறங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதனால் இந்த பகுதியில் விமானப்படை தளம் அமைக்கப்படும் என தெரிகிறது.