சென்னை, வேலூரைத் தொடர்ந்து திண்டுக்கல் அருகே ஜோசப் முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு
முதியோர் கொலை விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் அருகே உள்ள ஜோசப் கருணை இல்லத்திலும் அதிகாரிகள் ஆய்வு நடத்திவருகின்றனர்.
Recommended Video
திண்டுக்கல் : ஆதரவற்ற முதியோர்களைக் கொன்று அவர்களின் எலும்புகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்த புகாரில் சிக்கியுள்ள ஜோசப் முதியோர் கருணை இல்லத்தின் கிளைகளிலும் தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் இயங்கி வந்த ஜோசப் கருணை இல்லத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி, ஆயிரக்கணக்கான முதியவர்களைக் கொன்று, அவர்களின் உடலைப் பதப்படுத்தி எலும்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக கடந்த வாரம் புகார் எழுந்தது. இதனை அடுத்து கோட்டாட்சியர் தலைமையில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை ஆகியோர் அங்கு ஆய்வு நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
அந்த காப்பகம் உரிய ஆவணங்கள் இல்லாமல் செயல்படுவதையும், இறந்தவர்களை பதப்படுத்த தனி சிமெண்ட் அறைகள் இருப்பதையும் ஆய்வில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக காப்பக நிர்வாகம் சார்பில், முறையான விளக்கம் தரப்படவில்லை.
இதனையடுத்து அங்கிருந்த முதியவர்கள் அனைவரும் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். மேலும் ஜோசப் கருணை இல்லத்தின் கிளைகள் உள்ள இடங்களிலும் மக்கள் போராடத் துவங்கியதை அடுத்து, வேலூர் காட்பாடியில் செயல்பட்டு வந்த கருணை இல்லம் நேற்று மூடி சீல் வைக்கப்பட்டது.
இன்று திண்டுக்கல் அருகே கொடைரோடு ஜோசப் கருணை இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அங்கு கடந்த மாதத்தில் மட்டும் 24 முதியவர்கள் இறந்த விவகாரம் தற்போது தெரிய வந்துள்ளது.