கோவை: டாஸ்மாக் போராட்டத்தின் கூட்டம் தாங்காமல் மயங்கி விழுந்த இன்ஸ்பெக்டர்
கோவை: கோவையில் மதுக்கடைகளை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் மாணவிகளுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் குதித்ததால் கூட்டத்தில் சிக்கி இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
கோவையில் உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் ஸ்ரீராமபுரம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடை குடியிருப்புகளுக்கு நடுவில் அமைந்துள்ளது.
எனவே அதை தமிழக அரசு உடனே அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி புரட்சிக இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த 5 மாணவிகள் உள்பட 25 மாணவர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி கமிஷனர் கீதா தலைமையிலான போலீசார் மாணவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி எச்சரித்தார். அதற்கு மாணவர்கள் மறுக்கவே கைது செய்வதாக கூறினார்.
உடனே மாணவ, மாணவிகள் 25 பேரும் கைகளை இணைத்துக் கொண்டு தரையில் படுத்துக் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பெண் போலீசார் மாணவிகளை கடுமையாக தாக்கி வேனில் ஏற்ற முயன்றனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நியாயமான காரணத்துக்காக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை போலீசார் தாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் களத்தில் குதித்தனர். மேலும் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பொதுமக்களிடம் இருந்து மாணவர்களை தனியாக பிரித்து கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாலை மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்ற முயன்றார். அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளு போராட்டத்தில் மாணவர்களின் கை இன்ஸ்பெக்டர் முத்து மாலையின் நெஞ்சில் பட்டது.
அவர் உடல்நலக்குறைவு காரணமாக பேஸ்மேக்கர் பொருத்தி இருந்தார். அதன்மேல் மாணவர்களின் கை பட்டதும் முத்து மாலை சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு நிலவியது. அங்கு இருந்த போலீசார் மயக்கமடைந்த இன்ஸ்பெக்டர் முத்து மாலையை மீட்டு அங்கிருந்த வேனில் ஏற்றி அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 25 மாணவர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டு அருகே உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக பாப்ப நாயக்கன் பாளையம் - காந்திபுரம் ரோட்டில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.