பருவமழை ஏமாற்றம் - கால்நடை தீவனத்திற்கு தட்டுபாடு
நெல்லை: பருவ மழை சரியாக பெய்யாததால் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டு கால்நடை தீவனத்திற்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் கார் பருவ நெல் சாகுபடி விளைச்சல் குறைந்து போய் விட்டது. பயிரிடப்பட்ட பல இடங்களில் பயிர்களுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் கருகின. சில இடங்களில் விளைந்த நெல்லுக்கு போதிய விலை இல்லாமலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடையம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல் கட்டு கட்டாக லாரிகள் மூலம் கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. கடந்த ஆண்டை விட தற்போது குறைவான விளைச்சல் இருப்பதால் வைக்கோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நெல் பயிர்கள் முற்றிய நிலையில் பறிக்கப்பட்டு களத்தில் கதிர் அடிக்கப்படும். அதில் இருந்த நெல்கள் உதிர்ந்த உடன் நெல்லை தனியாக பிரித்து எடுப்பார்கள். எஞ்சிய பகுதிகளை வெயிலில் காய வைத்தால் வைக்கோல் கிடைக்கும். இதுவே கால்நடைகளி்ன் முக்கிய தீவனமாகும். ஆனால் மழை இல்லாமல் நெற்பயிர்கள் பயிர் செய்யவே முடியவில்லை. பிறகு எப்படி காய்ந்த வைக்கோல் கிடைக்கும். கடந்த ஆண்டு வைக்கோல் ஓரு கட்டு ரூ.5க்கு விற்கப்பட்டது. தற்போது வைக்கோல் பற்றாக்குறையால் ரூ.10 வரை விற்கப்படுகிறது என்பது கால்நடை வளர்ப்பாளர்களின் கவலையாகும்.