கிழிஞ்சது கிருஷ்ணகிரி.. இன்னும் ஒரு வாரத்துக்கு பணத்துக்கு அலையணுமாம்...!
நாட்டில் நிலவும் பணப் பற்றாக்குறை சரியாக இன்னும் ஒரு வாரமாகும் என்று மத்திய அரசுக்கு உளவுத்துறை தகவல் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: தற்போது நிலவி வரும் பணப் பற்றாக்குறை இப்போதைக்குத் தீரும் என்று தெரியவில்லை. குறைந்தது ஒரு வாரமாகுமாம் சரியாக. இதை சொல்வது உளவுத்துறை தகவல்கள்.
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து பல நாட்களாகி விட்டது. மக்கள் அன்று முதல் தொடர்ந்து அல்லலுக்குள்ளாகி வருகின்றனர். நிலைமை எப்போது சரியாகும் என்று தெரியவில்லை. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறுகிறார்களே தவிர நிலைமை சரியாவதாக இல்லை.
இதற்கு முக்கியக் காரணம், ஏடிஎம்கள் இன்னும் முழு அளவில் மக்களுக்குப் பணம் தராமல் இருப்பதே. அதில் 2000 ரூபாய் நோட்டுதான் தற்போது அதிகம் வருகிறது.
கரும்புள்ளி குத்தி
ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஏடிஎம் மூலம் 2500 மட்டுமே எடுக்க முடியும் என்ற சிலாபும் போட்டுள்ளனர். வங்கியில் போய் எடுக்கலாம் என்றால் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.4500 மட்டுமே தருகிறார்கள். கூடவே கையில் கரும்புள்ளியும் குத்தி அனுப்பி விடுகிறார்கள். மறுபடியும் வங்கிப் பக்கம் போக முடியாது.
குளறுபடிகள்
இந்த குளறுபடி காரணமாக கையில் பணம் இருந்தாலும் கூட அதை எடுத்து அனுபவிக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஏடிஎம் மெஷின்களில் 50, 100, புதிய 500 ரூபாய் தாள்கள் சகஜமாக கிடைக்கும் வரையில் சிக்கல் தொடரும் என்றே தெரிகிறது.
சப்ளை சரியில்லை
ஆனால் தேவைப்படும் அளவுக்கு சப்ளை இல்லை என்கிறார்கள். அதாவது புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் சப்ளை ரொம்பக் கேவலமாக இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதேபோல 50,100க்கும் கடும் தட்டுப்பாடு உள்ளது. ரிசர்வ் வங்கியிலேயே ரூபாய் நோட்டுக்கள் இல்லாமல் 5 ரூபாய் சில்லறையை மூட்டை மூட்டையாக் கொடுத்து மக்களைத் தவிக்க விடுகிறார்கள்.
போர்க்கால அடிப்படையில்
சப்ளை சரியாக இல்லாத காரணத்தால் பிரச்சினை இப்போதைக்கு தீராது என்றும் நிலைமை சரியாக ஒரு வாரமாகும் என்றும் மத்திய அரசுக்கு உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. போர்க்கால அடிப்படையில், மக்களுக்குத் தேவையான பணத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.