வாக்கு பதிவு மையங்களைத் தகர்க்க தீவிரவாதிகள் திட்டம்... உளவுப்பிரிவு எச்சரிக்கை
நெல்லை: சென்னை கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்ததை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் போலீசார் தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் கடந்த 24ம் தேதி ஓரே கட்டமாக தேர்தல் நடந்தது.
தமிழகம் முழுவதும் 60 ஆயிரத்து 817 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 72.83 சதவீத வாக்குகள் பதிவாகின. அதன் பிற்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் பலத்த போலீ்ஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் கொண்டு செல்லப்பட்டன.
42 வாக்கு எண்ணிக்கை மையங்கள்
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு 42 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஸ்டிராங் ரூம்களில்
வாக்கு பதிவு இயந்திரங்கள் ஸ்டராங்க் ரூம் என்று அழைக்கப்படும் அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறையை ஓரு வழியை கொண்டதாக மட்டுமே இருக்கும்.
24 மணி நேர பாதுகாப்பு
மேலும் அறையை சுற்றி 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் அடுக்கு பாதுகாப்பில் மத்திய போலீசாரும், துணை ராணுவ படையினரும், 2, 3ம் அடுக்கில் ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லையில்
நெல்லை தொகுதி இயந்திரங்கள் நெல்லை அரசு என்ஜினியரிங் கல்லூரியிலும், தென்காசி தொகுதி இயந்திரங்கள் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியிலும் வைக்கப்பட்டு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு் போடப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பு எதிரொலி
இந்த நிலையில் பெங்களூரில் இருந்து கவுகாத்தி செல்லும் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்து போது குண்டு வெடித்ததால் பெண் ஒருவர் பலியானார். 14 பேர் காயம் அடைந்தனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு
இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தீவிரவாதிகள் தாக்கலாம்
இந்த நிலையில் அவர்கள் வாக்கு பதிவு இயந்திரங்களை வைக்கப்பட்டுள்ள மையங்களில் தாக்குதல் நடத்தி குழப்பம் உண்டாக்கலாம் என்று மத்திய உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலத்தப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் பாதுகாப்புக்கு டிஜிபி உத்தரவு
இதை தொடர்ந்து 42 மையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க டிஜிபி ராமனூஜம் உத்தரவிட்டுள்ளார். ஓவ்வொரு மையத்திலும் நேற்று மாலை முதல் கூடுதலாக 50 அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.