ஜாதி மாறி காதலித்த ஜோடியை ஊர்க் கூட்டம் போட்டு "கொல்ல" முடிவடுத்த கிராமம்.. திருச்சி அருகே பகீர்!
திருச்சி: ஜாதி மாறி காதலித்ததால் ஊர்க்கூட்டம் போட்டு எங்களை ஆணவக் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர் என்று திருச்சி போலீசில் இளம்பெண் ஒருவர் பகீர் புகார் கொடுத்த சம்பவம் அதிர வைத்துள்ளது.
திருச்சி மாவட்டம் பூலாங்குலத்துப்பட்டி செட்டியூரணிப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மகள் உமா, திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் காதலனுடன் வந்து ஒரு புகார் மனுஅளித்தார்.
அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் சத்திரம் பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.காம் முதலாமாண்டு படித்து வருகிறேன். மணிகண்டம் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் சத்தியராஜ் என்பவரும், நானும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.
எனது காதலர் வேறு சமூகம் என்பதால் இதுகுறித்து அறிந்த எனது பெற்றோர் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கடந்த ஆகஸ்ட் 28-ந் தேதி வீட்டைவிட்டு வெளியேறி கோவையில் உள்ள மருதமலையில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். இதை அறிந்த எனது பெற்றோர் ஆணவ கொலை செய்து விடுவதாக எங்களை மிரட்டுகின்றனர்.
இதுகுறித்து ஊர்கூட்டம் நடத்தி எங்களை கண்டுபிடித்து கொன்று விட வேண்டும் என பேசி முடிவு செய்துள்ளனர். ஆகையால் எனது பெற்றோரிடமிருந்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உமா அந்த மனுவில் கூறியுள்ளார்.