கும்பகோணத்தில் கலப்பு திருமணம் செய்த தம்பதி தற்கொலை.. தவிக்கும் ஒன்றரை வயது குழந்தை
கும்பகோணம்: ஒன்றரை வயது குழந்தையை பரிதவிக்கவிட்டு விட்டு கலப்பு திருமணம் செய்த தம்பதி தற்கொலை செய்த சம்பவம் கும்பகோணத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த தாரசுரம் அருகே பேட்டைகுடியான் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அருணா என்பரை காதலித்து கலப்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு தற்போது ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
பாலமுருகன் அந்த பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பரோட்டோ மஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர்களது வீடு இன்று நீண்ட நேரம் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது அருணா விஷம் குடித்தும், பாலமுருகன் தூக்கிட்டும் தற்கொலை செய்து இறந்துகிடந்தனர். அங்கு குழந்தை மட்டும் பரிதவித்தபடி இருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அருணா, பாலமுருகன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றறை வயது குழந்தையை தவிக்க விட்டுவிட்டு, தாய், தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.