உடுமலை சங்கர் கொலையால் அச்சம்... திண்டுக்கல் போலீசில் தலித் இளைஞர் மனைவியுடன் தஞ்சம்!
திண்டுக்கல்: உடுமலைப்பேட்டையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் சங்கரை கூலிப் படை படுகொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியிருக்கிறது. இந்த நிலையில் சங்கருக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கும் வந்துவிடுமோ என அஞ்சி திண்டுக்கல் போலீசிடம் ஜாதி மறுப்பு திருமணம் செய்த தலித் இளைஞர் சிவபெருமாள் மனைவியுடன் வந்து பாதுகாப்பு கோரி மனு கொடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் காதலித்து கலப்பு திருமணம் செய்த சங்கர் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையை சேர்ந்த தலித் இளைஞர் சிவபெருமாள், தன்னுடைய காதல் மனைவி காமாட்சி பிரியாவுடன் பாதுகாப்பு கேட்டு திண்டுக்கல் எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று தஞ்சம் அடைந்தார். அப்போது அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் மனு கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சிவபெருமாள் கூறியதாவது:
நானும், காமாட்சி பிரியாவும் சிறுவயதில் இருந்தே பழகி வந்தோம். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த நாங்கள் கடந்த 13-5-2013 அன்று திருமணம் செய்துகொண்டோம். திருமணம் முடிந்ததும் சென்னையில் வசித்து வந்தோம்.
நாங்கள் திருமணம் செய்ததை என்னுடைய மனைவியின் உறவினர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, கர்ப்பமாக இருந்த என்னுடைய மனைவியை தாக்கி கருவை கலைத்தனர். அப்போது போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் மீண்டும் சொந்த ஊரான சித்தையன்கோட்டையில் வசித்து வருகிறோம்.
இங்கும் கூலிப்படை ஆட்கள் மூலம் எங்களுக்கு மிரட்டல் வருகிறது. என் மனைவியின் சான்றிதழ்கள், வீட்டில் இருந்த பொருட்கள், பணத்தை அவர்கள் அள்ளி சென்றனர். தற்போது என்னுடைய மனைவி 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
கலப்பு திருமணம் செய்த மாணவர் சங்கர் கொலை செய்யப்பட்ட நிலை எங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ? என்று அஞ்சுகிறோம். எனவே எங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு சிவபெருமாள் கூறினார்.