உலக கடற்கரை தூய்மை தினம்: மெரீனாவை சுத்தம் செய்த மேயர் துரைசாமி, எம்.எல்.ஏ. நடராஜ்
சென்னை: உலகம் முழுவதும் 'சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம்' கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தமிழக கடலோர காவல்படை சார்பில் சென்னை மெரினாவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, மைலாப்பூர் சட்டசபைத் தொகுதி எம்.எம்.எல் நடராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் தமிழக கடலோர பாதுகாப்புப்படை கிழக்கு பிராந்திய இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராஜன் பட்டாச்சார்யா ஆகிய அதிகாரிகள், கடற்படை காவல் அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். உள்ளிட்ட இயக்கங்களை சேர்ந்த மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடற்கரையை சுத்தம் செய்யும் பணியை மயிலாப்பூர் எம்.எல்.ஏ நடராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களோடு, மாணவர்களாக மேயர் சைதை துரைசாமி, எம்.எல்.ஏ நடராஜ் ஆகியோர் கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளை எடுத்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அவருடன் போலீஸ் அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் என அனைவரும் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியினை மேற்கொண்டனர். இதனால் சென்னை மெரினா கடற்கரை புதுப்பொலிவுடன் காணப்பட்டது.
சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தும் தினத்தையொட்டி, சென்னை கலங்கரை விளக்கம் அருகிலும், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.