போலாம் ரைட்... இன்று பஸ்ஸில் பயணித்தால் மறக்காமல் "இவருக்கு" தேங்ஸ் சொல்லுங்க!
சர்வதேச கண்டக்டர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை: நாள்தோறும் எத்தனையோ பேரின் வேலைகளை பார்க்கிறோம். ஆனால் ஒருநாளும் அவர்களது தொழில் நேர்த்தியை பற்றியோ, திறமையை பற்றியோ பாராட்டுவதும் இல்லை, ஊக்கப்படுத்துவதும் இல்லை. அதுபோல நாம் கவனிக்க மறந்த, அல்லது பாராட்ட தயங்கிய பிறவிகள்தான் பஸ் கண்டக்டர்கள். ஆம். இன்று சர்வதேச நடத்துனர்கள் தினம்.
தோள்பட்டையிலே ஒரு பையை தொங்கவிட்டுக் கொண்டு, விரல்கள் 5 தான். ஆனால் அந்த விரல்களின் இடுக்குகளில் ஒரு விசிலையும், டிக்கெட்டுகளையும், ரூபாய் நோட்டுக்களையும் லாவகமாக பிடித்துக் கொள்ளும் அழகே அலாதிதான். எப்போது டிரைவர் பிரேக் அடித்தாலும் இந்த விரல்களில் உள்ள இவை யாவும் தன் பிடியிலேயே இறுக்கி வைத்துக்கொள்ளும் பாங்கே அழகுதான்..
சபல அரங்கேற்றம்
எவ்வளவு கூட்ட நெரிசல் ஒருவர்மீது மற்றொரு பயணி விழுந்து கிடந்தாலும், அந்த கூட்டத்தில் நுழைந்து தன்னை திணித்து குறுக்கும் நெடுக்குமாய் நடக்கும் செல்ல வேண்டிய நிலை. வேகமாக பேருந்து சென்றாலும், கால்களை அகல விரித்து நின்று கொண்டு டிக்கெட் டிக்கெட் என்று கத்தி, கத்தி கூவி அழைத்து கூப்பிடும் பாங்கே அழகுதான்..
நேரடியாகவும், மறைமுகமாகவும் பேருந்தில் தன் கண்முன்னே நடைபெறும் காமுகர்களின் சபல அரங்கேற்றங்களையும், பிக்பாக்கெட் அநியாயங்களையும் கண்டும் காணாமல் இருந்துவிட முடியாத நிலையும், பேருந்தினுள் வியர்வை ஒழுகி புழுக்கத்தில் வெந்து கிடந்தாலும், பீக் டைம் என்று சொல்லக்கூடிய பரபரப்பு நேரத்திலும், சரியான சில்லறையை கண்ணிமைக்கும் நேரத்தில் கொடுக்கும் புத்திகூர்மையே அழகுதான்..
திட்டும் பாங்கும் அழகுதான்
பேருந்தின் கூட்டத்தினுள் "கண்டக்டர் சார்.. இந்த ஆளை என்னன்னு வந்து கேளுங்க.. மேல மேல வந்து விழறான்". "ஐயோ என் பர்சை காணோம்" என்ற பல குரல்களுக்கும் மதிப்பளித்து உடனடியாக கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தமும், கடமை உணர்ச்சியும் அழகுதான்.. டிக்கெட்டும், சில்லறைகளை கொடுக்கும் வேலையில் எவ்வளவு மும்முரமாக இருந்தாலும், படிக்கட்டில் வேண்டுமென்றே தொங்கி கொண்டு ஹீரோயிசம் காட்டும் இளைஞர்களை நொடிக்கொருதரம் பார்த்துக் கொண்டே காட்டும் அக்கறையும் அவர்களை உரிமையுடன் திட்டும் பாங்கும் அழகுதான்..
விழிப்புணர்வு நிலை
பயணிகளிடம் கொடுக்க மீதி சில்லறை இல்லாவிட்டால், டிக்கட்டின் பின்புறம் எழுதி கொடுத்துவிட்டு அனுப்பிவிட்டாலும், நம் மீதி பணம் வருமோ, வராதோ, கண்டக்டர், தருவாரோ, தரமாட்டாரோ என்று பயணம் முழுதும் தவித்து கிடக்கும் நேரத்தில், தன் இருப்பிடத்திலிருந்து எழுந்து வந்து பாக்கி சில்லறையை கொடுத்துவிட்டு போகும் நேர்மையே அழகுதான்..
பஸ்ஸுக்கு முன்னாலயும், பின்னாலயும் வரும் வண்டிகளை தலையை திருப்பி திருப்பி கவனித்து, விபத்து ஏதும் நிகழாமல் ஓட்டுனருக்காக எப்போதும் இருக்கும் விழிப்புணர்வு நிலையும் அழகுதான்..
வீசும் நேசப்பார்வை
கூட்டம் அதிகம் இருக்கும் நேரங்களில், தன் இருக்கைக்கு முன் பெரியவர்களோ, ஊனமுற்றவர்களோ, கர்ப்பிணிகளோ, குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஏறும் எந்த பயணியாக இருந்தாலும், தான் எழுந்து தன் சீட்டை கொடுத்து உட்கார வைக்கும் மனிதாபிமானமே அழகுதான்.. வழக்கமாக வரும் பயணிகளிடத்தில் வீசும் நேசப்பார்வையும், கடமையிலேயே கண்ணாக இருந்தாலும் அவர்களிடம் பேசிவிட்டு போகும் ஓரிரு வார்த்தைகளும் அழகுதான்..! காக்கியிலிருந்து நீல சட்டைக்குள் மாறி... தன் பணியை செம்மையாக ஆற்றிக் கொண்டிருக்கும் தமிழக கண்டக்டர்கள் அனைவருக்கும் இனிய சர்வதேச கண்டக்டர்கள் தின வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்கட்டும். "போலாம் ரைட்....."!