திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
திருச்சி: திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழ் முதுகலை, மற்றும் உயராய்வுத்துறையின் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 22.09.2015 (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணிக்குத் தொடங்கி, நடைபெறுகின்றது.
தமிழ்ச் சமூகம் - கலாச்சாரம்- கல்வி - வணிகம் - இலக்கியங்களில் தகவல் தொடர்புச் சாதனங்களின் தாக்கமும் மாற்றமும் என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை வெளியிடப்படுகின்றது.
பன்னாட்டுக் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் முனைவர் முகமது சாலிகு அவர்கள் தலைமையில் நடைபெறுகின்றது. பன்னாட்டுக் கருத்தரங்கில் மலேயா பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவருமான மன்னர் மன்னன் கலந்து கொண்டு கருத்தரங்கைத் தொடங்கிவைத்து, தொடக்கவுரையாற்றுகின்றார். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு கட்டுரை படைக்கின்றனர்.
மாலையில் நடைபெறும் நிறைவு விழாவில் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பீ.மு.மன்சூர் கலந்து கொண்டு கருத்தரங்க மதிப்பீட்டு உரை வழங்குகின்றார். புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தொழில்நுட்ப வளர்ச்சியும் தமிழ்வளர்ச்சியும் என்ற தலைப்பில் நிறைவுரையாற்றுகின்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் சிறப்பாகச் செய்துள்ளனர்.
தொடர்புக்கு: பேராசிரியர் சிராஜூதின் 0091 9865721142