பெண்களைக் கொண்டாடுங்கள்... இன்று மட்டுமல்ல, வாழ்க்கை முழுவதும்!
சென்னை : பெண்கள் கொண்டாடப் பட வேண்டியவர்கள் தான். ஆனால், மகளிர் தினம் எனும் இன்று மட்டுமல்ல.... வாழ்க்கை முழுவதும்.
ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு தலைவர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துக்கள் கூறுவதும், அன்றைய தினம் விற்பனையில் சில சலுகைகள் வழங்குவதுமாக சமூகம் தன் கடைமையைச் செவ்வனே செய்து வருகிறது.
ஆனால், அது மட்டுமே பெண்களுக்குப் போதுமானதா எனக் கேட்டால் நிச்சயம் இல்லை. அரைமணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் ஒரு நாட்டில், பெண்களுக்கு பாதுகாப்பாக வாழத் தகுதியான சூழ்நிலையை ஏற்படுத்தித் தரப்போவது எப்போது.
முதல் ஆயுதம்...
ஒரு ஆணை, அவனது குடும்பத்தை அல்லது சமூகத்தை கதற வைக்க எதிராளி எடுக்கும் முதல் ஆயுதமாக பெண் மீதான பாலியல் வன்முறை தான் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் வயது பாராபட்சம் பார்க்காமல் சிறுமிகளும், வயதான பெண்களும் கூட இலக்காவது தான் கொடுமையிலும் கொடுமை.
பாலியல் வன்முறை...
ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையை சுலபமாகத் தகர்க்க பல ஆண்கள் எடுக்கும் ஆயுதமும் பாலியல் வன்முறை தான். பராசக்தி வசனம் போல பெண்கள் வாழ்க்கை முழுவதும் யாரையோ பார்த்து பயந்து, பயந்து வாழ்க்கையின் ஓரத்திற்கு ஓடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
பிரசவம் எனும் மறுஜென்மம்...
அவர்களின் ஓட்டத்தைத் தடுத்து, பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய சிலரே, சமயங்களில் வேலியே பயிரை மேய்ந்த கதையாகிப் போவதும் வேதனையிலும் வேதனை. பெண் என்பவள் பொம்மையல்ல. பிரசவ நேரத்தில் மனிதர்களால் தாங்க இயலும் வலியிலும் அதிகப்படியான வலியைத் தாண்டி, புதிய ஜீவனைத் தரும் ஜீவாத்மாக்கள்.
கேள்விக் குறியாகும் பாதுகாப்பு...
பெண்களால் நிலாவிற்குக் கூட தனியாகச் சென்று வர முடியும் போலும், ஆனால், சொந்த ஊரில் இரவு நேரங்களில் சுதந்திரமாகக் காற்று வாங்கக் கூட முடியவில்லை.
எங்கே சுதந்திரம்...?
இரவு நேரத்தில் ஆபரணங்கள் அணிந்த பெண் எப்போது சுதந்திரமாக உலவ முடிகிறதோ அன்று தான் இந்தியாவிற்கு முழுச் சுதந்திரம் கிடைத்து விட்டதாகக் கொண்டாட முடியும் என்றார் மகாத்மா. ஆனால், இன்று நிலைமை அப்படியா உள்ளது.
உடல் கூட உரிமையில்லையா...?
பெண்களே, உங்கள் உடல் கூட எங்கள் சொத்துத் தான் என்கிறார்கள் குற்றவாளிகள். வெளியே தனியாகச் சுற்றும் பெண்கள் அனைவருமே மோசமானவர்கள் என்கிறார்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் சில பெரியவர்களும், குற்றங்கள் செய்து சிறைக்குள் இருக்கும் சிறியவர்களும்.
எந்த வகையில் இது நீதியாகும்...?
பலாத்காரம் செய்யும் போது ஒரு பெண் அமைதியாக இருக்க வேண்டும், இல்லையென்றால் அவளைக் கொன்று விடுவது தவறில்லை என மறைமுகமுக பாடமெடுக்கிறான் குற்றவாளி. தனக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்களைக் கூட அமைதியாக பாதிக்கப் பட்ட பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது எந்த வகையில் நீதி.
கண் துடைப்புக் கொண்டாட்டங்கள்...
பட்டங்கள் ஆள்வதற்கும், சட்டங்கள் செய்வதற்கும் வீட்டை விட்டு வெளியேறும் பெண்களைக் குறி வைத்துக் காத்திருக்கும் இந்த காமுகர்கள் வாழும் வரை, மகளிர் தினக் கொண்டாட்டங்கள் வெறும் கண் துடைப்பு தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
எங்கே செல்லும் இந்தப் பாதை...?
தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உடன் சேர்ந்து பயணிக்கும் பெண்களைக் கொண்டாட வேண்டும் என நினைக்கும் ஆண்களுக்கு, அவளது பிறப்புறுப்பில் கை விட்டு குடலை வெளியே உருவ வேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும்?
என்று சாத்தியமாகும் ?
கருப்பையில் தன் சுவாசக் காற்றைப் பகிர்ந்தளித்து உயிர் கொடுத்த பெண்ணை, உலகில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போது அனைவரது மனதிலும் ஆணித்தரமாக உருவாகிறதோ... அதனைத் தொடர்ந்து வரும் அனைத்து நாட்களும் மகளிருக்கு கொண்டாட்டமான தினங்கள் தான் !