குமாரசாமி பதவியேற்பிலும் ஸ்டாலின் கருப்பு சட்டையுடன் பங்கேற்பாரா? தமிழிசை காட்டம்!
குமாரசாமி பதவியேற்பிலும் ஸ்டாலின் கருப்பு சட்டையுடன் பங்கேற்பாரா என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
கோவை: தமிழ் உணர்வும் தமிழ்நாடு பற்றும் திமுகவிற்கு இல்லை என்று தெரிவித்த தமிழிசை சவுந்தராஜன், எதுக்கெடுத்தாலும் கருப்பு சட்டை அணியும் ஸ்டாலின், குமாரசாமி பதவி ஏற்பிலும் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொள்வாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
பொள்ளாச்சி செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த பா.ஜ.க தலைவர் தமிழிசைசவுந்தரராஜன் விமானநிலைத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பேசியதாவது:
உண்மையில் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டு எடுக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய பங்கு வகிப்பது மத்திய அரசின் வரைவு திட்டம்தான். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நமக்கு நிச்சயம் தண்ணீர் வரும். இதன் வெற்றி கூட்டம் பா.ஜ.க சார்பாக 40 இடங்களில் நடைபெற உள்ளது. காவிரி விவகாரத்தில் எந்த அளவிற்கு பா.ஜ.க. தமிழகத்தின் உரிமையை மீட்டுள்ளது என்பதை நாங்கள் பொதுகூட்டம் மூலம் பதிவு செய்வோம்.
கருணாநிதியின் பிறந்தநாள் விழா, காவிரி மீட்டெடுத்த வெற்றி கொண்டாட்டமாக கொண்டாடுவதாக ஸ்டாலின் கூறியுள்ளது தவறானது. திமுகவின் தோல்விதான் இன்று வெளிப்படையாக காவிரியில் வெற்றியாக வந்துள்ளது. கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவி ஏற்பில் திமுக கலந்துகொள்வது தவறு இல்லை. ஆனால் சட்ட தீர்வு முடிந்து உரிமை மீட்டெடுத்த பின்பும் தண்ணீர் திறந்துவிட பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என குமாரசாமி சொல்வது நியாயமல்ல. தமிழ் உணர்வும் தமிழ்நாடு பற்றும் திமுகவிற்கு இல்லை. எதுக்கெடுத்தாலும் கருப்பு சட்டை போடும் ஸ்டாலின், குமாரசாமி பதவி ஏற்பில் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொள்வார்களா?
தோல்வி அடைந்த காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைப்பது மக்கள் விருப்பத்திற்கு எதிரானது. பெட்ரோல் டீசல், விலை ஜி.எஸ்.டியில் கொண்டு வர உள்ளதாக அமைச்சர் கூறிஉள்ளார். பெட்ரோல் டீசல் விலை குறைய கோரி கடிதமும் எழுதி உள்ளோம். நிச்சயம் விலை குறைக்கப்படும்.
எஸ்.வி.சேகர் பெண்களை இழிவுபடுத்தி கருத்து பதிவிட்டது குறித்து, கட்சியின் வழிமுறைபடி ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டதிற்கு எஸ்.வி.சேகர் வரவில்லை. கட்சியின் உள் விவகாரகங்கள் குறித்து ஊடகங்களிடம் பகிர முடியாது. ஆனால் பெண்களை இழிவுபடுத்துபவர்களை பா.ஜ.க ஊக்கப்படுத்தாது.
தமிழக சுகாதாரதுறை, மத்திய மற்றும் கேரளா சுகாரதுறை உண்மையில் நிபா வரைஸ் பரவிவருகிறதா என தெளிவுபடுத்தி அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.