முத்துப்பேட்டை தர்கா பகுதி முஸ்லிம்கள் மீது தாக்குதல்: சமூக விரோதிகளை கைது செய்க- தவ்ஹீத் ஜமாத்
சென்னை: திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை தர்கா பகுதியில் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அதன் தலைவர் எஸ்.எம். பாக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள தர்கா பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் மீது கடந்த 31.12.2014 அன்று இரவு ஹிந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொலைவெறித் தாக்குதல் களை நடத்தியுள்ளனர்.
புத்தாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அன்றைய தினம் இரவு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷம் எழுப்பியும், முஸ்லிம்கள் சிலரது வீடுகளின் மீதும் தாக்குதல் நடத்தியும், தர்கா காம்பவுண்டை ஆயுதங்கள் கொண்டு உடைத்தும், தெரு விளக்குகளை நொறுக்கி பொது சொத்திற்கு சேதம் விளைவித்தும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹிந்துத் துவாவினரின் இந்த செயலுக்கு இந்திய தவ்ஹீ த் ஜமாஅத் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
முத்துப்பேட்டை பகுதியில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் வகுப்பு பதட் டம் ஏற்படும் போதிலும், அங்குள்ள பல்வேறு சமய மக்களும் சகோதர உணர்வுகளுடன் வாழ்ந்து வருகின்றனர். முத்துப்பேட்டை மக்கள் மத்தியில் வகுப்பு உணர்வை வளர்த்து அதன் மூலம் சமூகப் பிளவுகளை உண்டு பண்ணி, வகுப்புவாத வன்முறைக்கு நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றன ஹிந்துத்துவா சக்திகள்.
சமய நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் குலைக்கும் இதுபோன்ற செயலை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. சமூக விரோத செயலில் ஈடுபடும் ஹிந்துத்துவா சக்திகளை காவல் துறை அடையாளம் கண்டு ஒடுக்க வேண்டும்.
தர்கா பகுதி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய ஹிந்துத்துவாவினரை உடனடியாக கைது செய்து சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல், தகுந்த கடுமையான சட்டங்களின் கீழ் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பாதிப்புக்குள்ளான பகுதியில் ஏற்பட்ட சேதங்களை மாவட்ட நிர்வாகம் பார்வையிட்டு அதற்குரிய இழப்பீட்டு தொகைகளை தாமதமின்றி வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அலட்சியப் போக்குடன் செயல்பட்டால் இந்திய தவ்ஹீத் ஜமாத் கடும் போராட்டங்களை முன்னெடுக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.