கடன் பிரச்சினை... "ஐ" படத்தை வெளியிட 3 வார இடைக்கால தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்து மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ஐ. இப்படம் பொங்கலை ஒட்டி வரும் 14ம் தேதி ரிலீசாகவுள்ளது. உலகமெங்கும் 3000க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 650க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சினிமா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது இப்படம்.
இந்நிலையில், பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம், ' 'ஐ'பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் எங்களுக்கு கடனாக செலுத்த வேண்டிய பணத்தை இன்னும் தரவில்லை. அதனால் அவர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் 'ஐ' படத்தை தடை செய்ய வேண்டும்' என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, '' 'ஐ' படம் வெளியிடுவதற்கு 3 வாரம் தடை விதிக்கிறேன். வாங்கிய கடனை ஆஸ்கர் ரவிச்சந்திரன் விரைவில் திருப்பித்தர வேண்டும். ஜனவரி 30-க்குள் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பதில் தர வேண்டும்'' என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவால், ' ஐ' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஐ படத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருப்பதால் விக்ரம் மற்றும் ஷங்கரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.