கருணாநிதி துணைவியார் ராஜாத்தி அம்மாள் வீடு புகுந்து "டாய் கன்"னால் மிரட்டிய பெங்களூர் திருடன்!
கருணாநிதி துணைவியார் ராஜாத்தி அம்மாள் வீடு புகுந்து பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய திருடன் பெங்களூரைச் சேர்ந்த நபர் என்று தெரிய வந்துள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பொம்மை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகைகளைப் பறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபர் பெங்களூரைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
அந்த நபரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவரது கையில் இருந்த பொம்மைத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவரது பெயர் ராஜேந்திர பிரசாத் என்றும் பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. ராஜாத்தி அம்மாள் குரல் கொடுத்து கத்தியதைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து வந்து அந்த நபரைப் பிடித்து விட்டனர்.
சென்னை சிஐடி காலனியில் ராஜாத்தி அம்மாள் வீடு உள்ளது. சம்பவம் நடந்த போது மகள் கனிமொழி வீட்டில் இல்லை. திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் அவர் பாதியிலேயே கூட்டத்திலிருந்து வெளியே வீடு திரும்பினார்.
ராஜேந்திர பிரசாத் பெங்களூரைச் சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது திருவல்லிக்கேணியில் வசித்து வருகிறார். பல சின்ன சின்ன திருட்டு வழக்குகள் இவர் மீது உள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். தற்போது இவரை மயிலாப்பூர் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.