தமிழக மீனவரை சுட்டுக்கொன்றது யார் சீனர்களா?.. என்ன சொல்ல வருகிறார் தமிழிசை??
தமிழக மீனவரை சுட்டுக்கொன்றது யார் என விசாரணையில் தெரிய வரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
வேலூர்: தமிழக மீனவரை யார் சுட்டுக்கொன்றது என்பது விசாரணையில் தான் தெரிய வரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். சீன நிறுவன கட்டுமான பணிகளும் அப்பகுதியில் நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிராட்ஜோ என்ற 22 வயது மீனவர் கொல்லப்பட்டார்.
இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் உட்பட தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில் இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
இந்நிலையில் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தமிழக மீனவரை யார் சுட்டுக்கொன்றது என விசாரணையில்தான் தெரியவரும் என அவர் தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளும் அங்கு நடைபெற்று வருவதால் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணைக்குப் பிறகு தான் தெரியவரும் என அவர் தெரிவித்துள்ளார்.