முதலீட்டாளர்கள் மாநாடு: ஆங்காங்கே செண்டை, நாதஸ்வர கச்சேரி - ஸ்தம்பித்துப் போன சென்னை "டிராபிக்"
சென்னை: முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி சென்னையின் முக்கியச் சாலைகளில் ஆங்காங்கே கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்திருந்ததால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் அவதியடைந்தனர்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதா இதைத் தொடங்கி வைத்தார்.
பச்சைக் கலரு ஜிங்குச்சா:
இதையொட்டியும், முதல்வர் வரும் வழியெங்கும் மாநாட்டை விளம்பரப்படுத்தும் பதாகைகள், டிஜிட்டல் பேனர்கள் என வைத்திருந்தனர் அடிபொடிகள். கிட்டத்தட்ட அனைத்துமே பச்சை கலரில்தான் இருந்தன.
மேடைபோட்டு கச்சேரி:
இதுபோக, அடையார், ஆளுநர் மாளிகை, கிண்டி, கத்திபாரா உள்ளிட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதாவது சாலையோரமாக மேடை போட்டு கச்சேரி நடந்தது.
பாவம் ஒரே கன்ப்யூசன்:
அதில் கவர்ச்சிகரமான பெண்கள் எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு நடனடமாட அதை ரசிக்க மக்கள் கூடி விட்டனர்.முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கும், அரை குறை ஆடையுடன் பெண்கள் ஆடியதற்கும் என்ன சம்பந்தம் என்றுதான் தெரியவில்லை.
ஒரே குஷிதான் போங்க:
மேலும், பல இடத்தில் செண்டை மேளம், நாதஸ்வரம் வாசிப்பும் அரங்கேறியது. ஆரவாரமாக பெண்கள் ஒரே பச்சை வண்ண பட்டுபுடவை கட்டி நாதஸ்வரம் வாசித்தனர்.
நெரிசலோ நெரிசல்:
இந்நிலையில் அதிமுகவினரும் பெருமளவில் சாலையின் இரு மருங்கிலும் திரண்டு வந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு வணக்கம் வைக்கவே ஜெயலலிதா வந்த பாதை நெடுகிலும் போக்குவரத்து நெரிசலாகி விட்டது.
மக்கள் கஷ்டப்பட்டா எங்களுக்கென்ன?:
இதனால், அடையார் முதல் நந்தம்பாக்கம் வரையிலான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஆகி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். காந்தி மண்டபம் பகுதியிலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.