மந்தைவெளி ஓவர்சீஸ் வங்கியில் மட்டும் மளமளன்னு வேலை நடக்குதே.. மக்கள் பாராட்டு!
மந்தைவெளி ஓவர்சீஸ் வங்கி பணத்தை மாற்ற வரும் மக்களின் வசதிக்காக செய்த ஏற்பாடுகளால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: மந்தைவெளியில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மக்களின் வசதிக்காக செய்த ஏற்பாடுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் மந்தைவெளி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கேஷியராக பணிபுரியும் சரணவனன் என்பவரின் பதிவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் மக்கள் வெயிலில் நீண்ட நேரம் கால் கடுக்க நிற்பதை தடுக்கும் வகையிலும், முடிந்தவரையில் சில்லரைகளாகவே கொடுக்கும் வகையிலும் சென்னை மந்தைவெளியில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பல வசதிகளை செய்துள்ளது.
அறிவிப்பு வந்த அடுத்த நாள் பணம் குறையக் குறைய currency chest -லிருந்து எடுத்து வந்து பொதுமக்களுக்கு கொடுத்த வந்ததாக தெரிவித்துள்ளார்.
முடிந்த வரையில் 50,20,10 என சில்லரைகளாக கொடுக்க முயற்சித்ததாக தெரிவித்துள்ள சரவணன், நேற்று முன்தினம் கூட்டம் அதிகளவில் இருந்ததால் மக்கள் கூட்டம் சாலைக்கு வரும் நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.மக்கள் சாலை வரை கால் கடுக்க நிற்பதை தடுக்க எண்ணிய வங்கி நிர்வாகம் நேற்று புதிய உத்தியை கையாண்டதாக தெரிவித்துள்ளார். அதாவது பணம் செலுத்துவது மற்றும் எடுப்பது ஆகிய இரண்டையும் வங்கியில் வைத்துக் கொண்ட நிர்வாகம் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணியை அருகில் இருந்த ஒரு மண்டத்தில் வைத்துக்கொண்டனர். மேலும் அங்கு நாற்காலி, ஃபேன் உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுத்தது. இதனால் வங்கியில் கூட்ட நெரிசல் குறைந்ததோடு, வெயிலில் மக்கள் நிற்பது தடுக்கப்பட்டது. இதனால் மக்கள் மட்டுமின்றி வங்கியில் பணிபுரியும் ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாடு முழுவதும் பணத்தை மாற்ற மக்கள் கால் வலிக்க வெயிலில் நிற்கும் நிலையில் அவர்களின் வசதியை கருதிய மந்தைவெளி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல்பாடு நிச்சயமாக பாராட்டுக்குரியது.
இதேபோல் மற்ற வங்கிகளும் மக்களின் வசதிக்கான குறைந்தளவு ஏற்பாடுகளை செய்தால் மக்கள் கண்டிப்பாக மகிழ்ச்சியடைவார்கள்..