ரூபாய் நோட்டு: தரங்கம்பாடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் மாரடைப்பால் மரணம்
ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தரங்கம்பாடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் மணிவண்ணன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தரங்கம்பாடி: ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தரங்கம்பாடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் மணிவண்ணன் (வயது 58) மாரடைப்பால் காலமானார்.
கடந்த 10 நாட்களாக செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக பொதுமக்கள் பெரும்துயரத்தை அனுபவித்து வருகின்றனர். வங்கி பணியாளர்களும் விடுமுறையின்றி உழைத்து வருகின்றனர்.
கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி, விரக்தியால் மனமுடைந்து பொதுமக்கள் உயிரிழப்பு தொடருகிறது. அதேபோல் கடும் பணிச்சுமையால் வங்கி ஊழியர்கள் மரணமடைவதும் நிகழ்ந்து வருகிறது. இதுவரை மொத்தம் 55 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் முதல் சம்பவமாக தரங்கம்பாடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியில் இருந்தபோது மாரடைப்பால் மணிவண்ணன் என்ற ஊழியர் உயிரிழந்துள்ளார். கடந்த 4 நாட்களாக இடைவிடாமல் தொடர்ச்சியாக பணியாற்றியனாராம் மணிவண்ணன்.
இதன்காரணமாகவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மரணம் வங்கி ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.