பணக்காரர்களுக்குதான் கவனிப்பா? என் பேங்க் அக்கவுண்ட்டை குளோஸ் பண்ணுங்க- இப்படியும் ஒரு கலகக்குரல்!
ஐஓபி வங்கிகளில் அதிக வைப்புத் தொகை வைத்து வரவு செலவு பார்ப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தஞ்சையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சை : தம்பிக்கோட்டை வடகாடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அதிக வைப்புத் தொகை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே மரியாதை கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை வடகாடு பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவர் அங்குள்ள ஐஓபி வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார்.
பணத்தை மாற்ற வங்கிக்கு சென்ற அவர் சந்தித்த கசப்பான அனுபவத்தால் தனது கணக்கை முடித்துக்கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவ்வங்கியின் மேலாளருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். தற்போது முகநூல் பக்கத்தில் உலா வரும் அந்த அறிக்கையில் தான் தம்ஐஓபி வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளதாக கூறி கணக்கு எண்ணை தெரிவித்துள்ள அவர் வங்கிக்கு வரும் போதெல்லாம் நீண்ட நேரம் காக்க வைக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
பணக்காரர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும் வங்கி நிர்வாகம் ஏழை எளிய மக்களை நீண்ட நேரம் காக்க வைப்பதோடு, அவர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துவதாக கூறியுள்ளார்.
இதனை தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர் இதனால் மிகுந்த மனவேதனை அடைந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இனியும் தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைக்க தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ள அன்பழகன், தனது கணக்கை கேன்சல் செய்து வைப்புத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.