போராட்டங்கள் தொடரும் நிலையில் ஐபிஎல் மக்களை திசை திருப்பி விடும்: இயக்குநர் அமீர்
தொடர் போராட்டங்கள் நடைபெறும் நிலையில் ஐபிஎல் மக்களை திசை திருப்பி விடும் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கான மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கும் நிலையில், ஐபிஎல் போன்ற விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் ,தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் மற்றும் மாணவ அமைப்புகள் என தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதனிடையே, நேற்று தமிழக முதல்வரைச் சந்தித்த இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர் பச்சான், அமீர் ஆகியோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை தற்போதைய சூழ்நிலையில் நடத்தக்கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர்.
தமிழகத்திற்கு சிக்கல்
இந்நிலையில், இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் இயக்குநர் அமீர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் நீட் தேர்வு தொடங்கி, காவிரி, ஸ்டெர்லைட், நியூட்ரினோ என தொடர்ந்து வாழ்வாதாரப் பிரச்னைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை
இதற்காக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடப்பது மக்களின் கவனத்தை திசை திருப்பிவிடும். எனவே, ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
மோடிக்கு வரவேற்பு
மேலும், தமிழகத்தில் நிலவி வரும் சூழல் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும். 12ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, அதற்கு முன்பாகவே காவிரி விவகாரத்தில் தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும். நமக்கான உணவை விவசாயிகள் உருவாக்குகிறார்கள். அதுபோல அவர்களுக்கான உரிமையை நாம் தான் பெற்றுத்தரவேண்டும்.
இளைஞர்கள் ஆதரவு
இல்லாவிட்டால் தமிழக மக்கள் அவருக்கு என்ன மாதிரியான வரவேற்பு கொடுப்பார்கள் என்று தெரியாது. அதேநேரம் மக்கள் கொந்தளிப்பான நிலையில் இருக்கும்போது, தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு வேறு மாநிலங்களைச் சேர்ந்த மூவரை துணைவேந்தர்களாக நியமித்து இருப்பதும் கண்டனத்திற்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், நாளை நடக்கவுள்ள பேரணியில் மாணவர்களும், இளைஞர்களும் திரளாகக் கலந்துகொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.