ஐபிஎல் போட்டிக்கு தடை கோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு
ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: சூதாட்டத்துக்கு தீர்வு காணாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2018-ஆம் ஆண்டுக்கான போட்டிகள் வருகிற 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 7 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இவற்றில் 3 பகல் ஆட்டங்களும், மீதமுள்ளவை இரவு பகல் ஆட்டங்களாக நடைபெறுகிறது.
சூதாட்ட புகாரில் சிக்கி தடை விதிக்கப்பட்டு 2 ஆண்டுகள் கழித்து இந்த போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2013-இல் சூதாட்ட புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கை தொடர்ந்தார்.
இதில் சூதாட்டத்துக்கு தீர்வு காணாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது. எனவே சென்னை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும். சூதாட்டத்தை தடை செய்யாமல் ஐபிஎல் நடத்தக் கூடாது என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
அப்போது நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக பிசிசிஐ, மத்திய அரசு ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளனர்.