ஆந்திராவில் தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி சசிகுமார் மர்ம மரணம் - செம்மரக்கடத்தல் புள்ளிகளுக்கு தொடர்பு?
சென்னை: திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த டி.எஸ்.பி. சசிகுமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது துப்பாக்கி தானாக வெடித்ததா என்பதில் மர்மம் நீடிக்கிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் சசிகுமார். குடும்பத்தில் முதல்தலைமுறை பட்டதாரியான இவர், 2012ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ். பணியில் தேர்வானார்.
2014ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆலகட்ட ஏ.எஸ்.பி.யாக நியிமிக்கப்பட்ட சசிகுமார் செம்மர கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்தார். எனவே சசிகுமாரின் மரணத்தில் செம்மரக்கடத்தல்காரர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்படுகிறது.
இதனிடையே 6 மாதங்களுக்கு முன் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏ.எஸ்.பி.யாக நியிமிக்கப்பட்டார். பதேரு பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்களையும், பல முக்கிய குற்றவாளிகளையும் கைது செய்தார். தொடர்ந்து ரெய்டு நடத்தும் சசிகுமார், பிப்ரவரி மாதம் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்தார்.
இந்நிலையில் இன்று சசிகுமார், தனது அலுவலகத்திலேயே துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் கிடந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டு வெளியே இருந்த காவலர்கள் உள்ளே சென்று பார்த்த போது சசிகுமார் ரத்த வெள்ளத்தில் இருந்ததைப் பார்த்தனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, சசிகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து விசாகபட்டினம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு எதிர்பாராதவிதமாக நடந்ததா அல்லது உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டதா என்பது உறுதியாக தெரியவரவில்லை. கஞ்சா கடத்தல்காரர்கள் கொடுத்த குடைச்சல்காரணமாக சசிகுமார் தற்கொலை செய்து கொண்டாரா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாகப்பட்டினம் புறநகரப் பகுதி காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்குச் சென்று சசிகுமாரின் மரணம் குறித்து ஆய்வு நடத்தினார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு கடற்கரை பிரிவு காவல் தலைவர் விஸ்வாஜீத் , திருமணம் ஆகாத இந்த அதிகாரி தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகம் உள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் தெளிவான தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றார்.
துப்பாக்கிக் குண்டு அவரது வலது புறத்தில் பாய்ந்துள்ளது என்றும், அவருக்கு பணிக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கி மேஜையில் இருந்ததாகவும் விஸ்வாஜீத் தெரிவித்தார். இதுகுறித்த முழுமையான தகவல் விரைவில் வெளியாகும் என்றும் விஸ்வஜீத் கூறினார்.
சசிகுமாரின் மரணம் அவரது சொந்த ஊரான சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சசிகுமார் மரணம் பற்றிய தகவல் கிடைத்த உடன் அவரது பெற்றோர்கள் விசாகப்பட்டினத்திற்கு விரைந்துள்ளனர்.
சசிகுமார் சிறுவயதில் இருந்தே துறு துறு என்று இருப்பார் என்றும் மிகவும் விருப்பத்துடன் ஐபிஎஸ் பணியில் சேர்ந்ததாகவும், நேர்மையாக செயல்பட்டு செம்மர கடத்தலில் ஈடுபட்ட பலரை கைது செய்ததால் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாகவும் சசிகுமாரின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
சசிகுமார் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டாலும், அவரது மரணத்திற்கு காரணம் செம்மரக்கடத்தல்காரர்களா? கஞ்சா கடத்தல்காரர்களா? மாவோயிஸ்டுகளா? உயரதிகாரிகளின் டார்ச்சரா? எது காரணம் என்று சரியான முறையில் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியும்.