ஹரீஸ் ஐ.பி.எஸ். மரணத்தில் நீடிக்கும் மர்மம்: உண்மை காரணத்தை கண்டறிய பெற்றோர் வலியுறுத்தல்
சென்னை: சென்னையில் மர்மமான முறையில் மரணமடைந்த ஐ.பி.எஸ் அதிகாரி ஹரீஸ் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்களது மகனின் இறப்பிற்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று அப்போது ஹரீன் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.
பெங்களூரை சேர்ந்தவர் ஹரீஸ், 32. 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வாகி, தமிழகத்தில் பணி அமர்த்தப்பட்டார். சமீபத்தில்தான் மதுரையில் இருந்து மாற்றலாகி சென்னையில் லஞ்ச ஒழிப்பு துறையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்தார்.
இவரோடு பணியில் சேர்ந்த சக போலீஸ் அதிகாரிகள் அனைவருமே பதவி உயர்வு பெற்று எஸ்.பிக்களாகி விட்டனர். ஆனால், ஹரீஸ் மட்டும் ஏ.எஸ்.பி.யாகவே பணியை தொடர்ந்துள்ளார்.
இதனால், மன அழுத்தத்தாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் ஹரீஸ் மரணமடைந்துள்ளார்.
இதுகுறித்து எழும்பூர் போலீசார், இயற்கைக்கு மாறான சாவு என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், ஹரீஸ் அறையில் இருந்து பிரியாணி, மதுபாட்டில், மருந்து, மாத்திரைகள் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில், விஷம் கலந்துள்ளதா? எனவும் விசாரணை நடக்கிறது.
இதேபோல், ஹரீஸ் பயன்படுத்திய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் கடைசியாக யார் யாருடன் பேசினார். யார் யாருக்கு குறுந்தகவல் அனுப்பினார் என்ற விவரத்தை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ரகசியமாக போலீசார் சேகரித்து வருகின்றனர்.
மேலும், ஹரீசின் நண்பர் ஒருவர் பரபரப்பு தகவல்களை வாட்ஸ் அப்பில் வெளியிட்டு இருந்தார். அதில், உயர் போலீஸ் அதிகாரிகள் யாரும் ஹரீசுக்கு ஆதரவாக இல்லை என்றும், இதுவே மெல்ல கொல்லும் விஷம்போல மாறியது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, உயர் அதிகாரிகள் வேண்டும் என்றே ஹரீசை புறக்கணித்துள்ளனர் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனால், ஹரீசுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரிகள் யார் யார்? என்ற பட்டியலும் தயாராகி வருகிறது.
டிஜிபி அசோக்குமார்
ஹரீசின் சடலம் சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. காவல்துறை டிஜிபி அசோக் குமார், போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹரீசின் மரணம் வேதனை அளிக்கிறது. இதனால், நாங்கள் வேதனை அடைந்துள்ளோம் என்று தெரிவித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், ஹரீஸ் மரணத்திற்கு முன்னாள் டிஜிபி ராமானுஜம் காரணமா? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த டிஜிபி, "நீங்களாக விசாரணை நடத்தாதீர்கள். இதில், உண்மை இல்லை. பிரேத பரிசோதனையை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
பெற்றோரிடம் ஒப்படைப்பு
நேற்று காலையில் பிரேத பரிசோதனை நடந்தது. சென்னை அரசு பொது மருத்துவமனை உடற்கூறு மற்றும் தடயவியல் துறை பேராசிரியர் டாக்டர் ராமலிங்கம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவால் படம் பிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர், ஹரீசின் சடலம் அவரது தந்தை நாகராஜப்பாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருமணம் நிச்சயம்
ஹரீஸ் சாப்ட்வேர் பொறியியல் பட்டதாரியாவார். படிப்பில் கோல்டு மெடல் வாங்கியுள்ளார். பதவி உயர்வு இல்லாததால் சிறிது வருத்தத்தில் இருந்துள்ளார். தற்போது, பதவி உயர்வுக்கான தமிழ் தேர்வை எழுதி முடித்து விட்டார். ஹரீசுக்கும் உறவுக்கார பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் விமர்சையாக நடந்தது. மார்ச் 21ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது இந்த நிலையில் திடீரென மரணமடைந்துள்ளது பெற்றோர்கள், உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிணக்கோலத்தில் பார்க்கிறேன்
ஹரீஸ் உடலைப் பெற்றுக்கொண்ட பெற்றோர் கண்ணீர் விட்டு கதறினர். ஹரீஸ் மரணம் எங்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் இருந்து எங்களால் எளிதில் மீண்டு வரமுடியாது. நினைத்தாலே வேதனையும், கண்ணீரும்தான் வருகிறது. மகனை மணக்கோலத்தில் பார்க்க நினைத்தேன். ஆனால், அவரை தற்போது பிணக்கோலத்தில் பார்ப்பேன் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை என்று கூறி தந்தை கண்ணீர் வடித்தார். மேலும், மகனின் இறப்பிற்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று இறுதிச்சடங்கு
சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஹரீசின் சடலம் அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. இன்று ஹரீஸ் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.