ஹேக் செய்யப்பட்டதா ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட்? அதிர்ச்சியில் ரயில் பயணிகள்
சென்னை: இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்பொரேசன் (IRCTC) வெப்சைட் ஹேக் செய்யப்பட்டதாகவும், சுமார் 1 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், அதை, ஐ.ஆர்.சி.டி.சி மறுத்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட் வாயிலாகத்தான் ஆன்லைனில் சுமார் 1 கோடிக்கும் அதிக ரயில் பயணிகள் டிக்கெட் புக் செய்கிறார்கள். வாடிக்கையாளர்கள் தங்களின் பான் நம்பர் உள்ளிட்ட தகவல்களை இந்த வெப்சைட்டில் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட்டில் இருந்து தகவல்கள் திருடப்பட்டு, கார்பொரேட் நிறுவனங்களுக்கு அவை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கில நாளிதழ் ஒன்று இச்செய்தியை வெளியிட்டது.
மகாராஷ்டிர மாநில அரசிடம், ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பு இதுகுறித்து தகவல் தெரிவித்து, காவல்துறையை உஷார்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும், அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதை மாநில கூடுதல் தலைமை செயலாளர், கே.பி.பக்ஷி உறுதி செய்ததாகவும் நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது.
அதேநேரம், இந்த செய்தியை ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் மறுத்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி மக்கள் தொடர்பு அதிகாரி, சந்தீப் தத்தா இதுகுறித்து கூறுகையில், ரகசிய தகவல்களை ஹேக் செய்ய முயன்றதாக கூட எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. இருப்பினும், சைபர் செல் துறையிடம், இதுகுறித்து புகார் கூறியுள்ளோம். அவர்கள் விசாரித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒருவேளை தகவல்கள் திருடப்பட்டிருந்தால், அதுதான் இந்திய வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய டேட்டா திருட்டாக அமையும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.