கண் தானத்தை வலியுறுத்தி.. 101 மணி நேரத்தில் 2100 துணிகளுக்கு இஸ்திரி.. சென்னை இளைஞரின் சாதனை முயற்சி
சென்னை: சென்னையை சேர்ந்த டேனியல் சுந்தர் என்ற இளைஞர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியாக, 101 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 100 துணிகளுக்கு இஸ்திரி செய்யும் பணியை தொடங்கியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் டேனியல் சுந்தர் என்ற இளைஞர். இவர், கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, புதிய சாதனை முயற்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதாவது, 101 மணி நேரத்தில் சுமார் 2100 துணிகளை இஸ்திரி செய்ய வேண்டும் என்பது தான் அவரது இலக்கு.
சென்னையில் உள்ள முக்கிய வணிகவளாகம் ஒன்றில் பொதுமக்கள் பார்வையில் இந்த சாதனை முயற்சி தொடங்கியுள்ளது. சென்னை மேயர் சைதை துரைசாமி இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
நேற்று தொடங்கிய இந்த நிகழ்ச்சி வரும் 30ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த சாதனை முயற்சியை மற்ற இடங்களில் உள்ள மக்களும் பார்க்கும் வகையில் சென்னையில் இரண்டு இடங்களில் எல்.இ.டி திரையில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.
இந்த சாதனை முயற்சியின் கூடவே பிரபலங்கள் பங்கேற்று கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். ரத்ததானம், சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தனது இந்த முயற்சியின் மூலம் ஐந்து நாட்களில் மட்டும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் கண் தானம் செய்வார்கள் என எதிர்பார்ப்பதாக டேனியல் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இங்கிலாந்தை சேர்ந்த கரேத் சாண்டர்ஸ் என்ற இளைஞர் 100 மணி நேரத்தில், இரண்டாயிரம் துணிகளை இஸ்திரி செய்ததே கின்னஸ் சாதனையாக உள்ளது. இந்த சாதனையை டேனியல் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.