லஞ்சத்திற்கு விலை போகும் விஏஓ, தாசில்தார்கள்.. போலி இருப்பிட சான்றிதழ் அநியாயம்!
லஞ்சத்திற்கு விலை போகும் விஏஓ, தாசில்தார்களால் ஏற்கனவே தவிப்பில் இருக்கும் தமிழக மாணவர்கள் போலி இருப்பிட சான்றிதழ் விவகாரத்தால் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை: லஞ்சம் கொடுத்தால் போதும். வெளிமாநில மாணவர்களுக்கு அப்படியே லட்டு போல சான்றிதழைத் தூக்கி கொடுத்து விடுகிறார்கள் சில ஊழல் பெருச்சாளி தாசில்தார், விஏஓக்கள். இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாவது அப்பாவி தமிழக மாணவர்கள்தான்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று தவித்திருந்த தமிழக மாணவர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஏமாற்றமே மிஞ்சியது. அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தந்து ஓராண்டு விலக்கு தருவோம் என்ற சொன்ன மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பல்ட்டி அடித்ததால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது தமிழக அரசு.
எனினும் செப்டம்பர் 4ம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் இல்லையென்றால் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி அந்த இடங்கள் அனைத்தும் காலியானதாக கருத்தில் கொள்ளப்படும். இதனால் வேறு வழியின்றி விடுமுறை நாளான விநாயகர் சதுர்த்தி அன்று கூட மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அரசு நடத்தியது.
அதிர்ச்சியான விஷயம்
+2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தமிழக மாணவர்கள் தர வரிசையில் பின்தங்கியுள்ளனர். இதனால் தங்களுக்கு அரசு ஒதுக்கீட்டு இடம் கிடைக்குமா என்ற தவிப்பில் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று வருகின்றனர். ஏற்கனவே தவிப்பில் இருக்கும் மாணவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியூட்டும் விஷயமாக இருக்கிறது இரண்டு மாநிலங்களில் இருப்பிட சான்றிதழ் பெற்று கலந்தாய்வில் பங்கேற்றும் சில மாணவர்களின் செயல். ஆந்திரா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநில மாணவர்கள் அவர்களின் சொந்த மாநிலத்திலும், தமிழகத்திலும் என இரண்டு இடங்களிலும் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.
லஞ்சத்தால் எளிமையான சான்றிதழ்
அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்தில் கலந்தாய்வில் பங்கேற்க அவர்களுக்கு இருப்பிட சான்றிதழ் தேவை. மற்ற மாநிலங்களில் சிபிஎஸ்இ பாடப்பிரிவில் பயின்ற மாணவர்களுக்கு அவர்கள் சார்ந்த மாநிலத்தில் கடும் போட்டியிருந்தாலும், தமிழகத்தில் அவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனை சாதகமாக்கிக் கொண்டு விஏஓ, தாசில்தாருக்கு லஞ்சம் கொடுத்து எளிமையாக இருப்பிட சான்றிதழ் பெற்று கலந்தாய்வில் பங்கேற்கின்றனர் மாணவர்கள்.
ரூ. 5 ஆயிரத்திற்கு கிடைக்கும்
அரசின் சலுகைகளை பெற மக்களிடம் இருந்து லஞ்சம் பெற்ற அதிகாரிகள், இது மாணவர்களின் எதிர்காலப் பிரச்னை என்பதை உணர்ந்து செயல்பட்டால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பிருக்காது. 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் எங்கு வேண்டுமானால் இருப்பிடச் சான்றிதழ் பெற்றுவிடலாம் என்ற நிலைமை வெளி மாநில மாணவர்களுக்கு சாதகமாகவும், தமிழக மாணவர்களுக்கு பாதகமாகவும் இருக்கிறது.
சிஸ்டம் இல்லை
போலி இருப்பிட சான்றிதழ் எளிதில் பெற்றுவிடலாம் என்பது ஒரு புறமிருந்தாலும், மற்றொரு புறம் இந்த மோசடியை கண்டுபிடிக்க எந்த வசதியும் இல்லை என்பது தான் அதிர்ச்சியான விஷயம். நாடு முழுவதும் ஒரே தேர்வு அதன் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை என்று சொன்ன மத்திய அரசு, ஒரு மாணவன் ஒரு மாநிலத்தில் மட்டும் தான் கலந்தாய்வில் பங்கேற்கிறார என்பதை உறுதிப்படுத்த எந்த வசதியும் இல்லை, இந்த பிரச்னைகளைக் களைந்தால் மட்டுமே எந்த மாணவருக்கும் பாதிப்பின்றி கலந்தாய்வில் இடம் கிடைக்கும் என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.