பொறுப்பில்லாமல் செயல்பட்ட மா.செக்களுக்கு திமுக ஆப்பு?
சென்னை: லோக்சபா தேர்தலில் ஏனோதானோவென்று செயல்பட்ட மாவட்டச் செயலாளர்களை நீக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
குறிப்பாக, திமுக 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்த தொகுதிகள், டெபாசிட் பறி போன தொகுதிகள், சொற்ப வாக்குகளில் வெற்றி பறிபோன தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளை கூண்டோடு தூக்கப் போகிறார்களாம்.
இதுதொடர்பான முக்கிய முடிவுகளை திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுவிலும் தொடர்ந்து நடைபெறவுள்ள செயற்குழுவிலும் விவாதித்து எடுக்கத் திட்டமிட்டுள்ளனராம்.
35 தொகுதிகளிலும் தோல்வி
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக போட்டியிட்ட 35 தொகுதிளிலும் தோல்வியைத் தழுவியது.
ஸ்டாலின் ராஜினாமா படலம்
இதையடுத்து அழகிரி பிரச்சினையைக் கிளப்பினார். ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து ராஜினாமா செய்வதாக ஸ்டாலின் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் அது கைவிடப்பட்டது.
உள்ளடி வேலைகள்.. உள்குத்துக்கள்..
இந்த நிலையில் திமுகவினர் பலர் பல தொகுதிகளில் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டதாகவும், கட்சி வேட்பாளர்களுக்கு பாதகமாக செயல்பட்டதாகவும், கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் சரியாக பணியாற்றாமல் மெத்தனம் காட்டியதாகவும் கட்சி் தலைமைக்கு புகார்கள் குவிந்துள்ளன.
உயர் நிலை செயல் திட்டக் குழு
இதையடுத்து இதுகுறித்து விவாதிக்க கட்சியின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தை ஜூன் 2ம் தேதி கருணாநிதி தலைமையில் திமுக கூட்டியுள்ளது.
மா.செக்களுக்கு ஆப்பு
இந்தக் கூட்டத்தின்போது பொறுப்பில்லாமல் செயல்பட்ட மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளை கூண்டோடு மாற்றுவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளதாம்.
இதில் யார் யார் தலை உருளப் போகிறது என்று கட்சி வட்டாரத்தில் கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டனர்.