இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கை முடி திருட்டு.. ரூ.1 கோடி மதிப்பு
சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய முடி திருடி செல்லப்பட்டுள்ளது. சாக்கு மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த இந்த முடியின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ளது இருக்கன்குடி, மாரியம்மன் கோயில். இக்கோயிலுக்கு, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, சென்னை, கோவை உள்ளிட்ட தொலை தூர பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
பக்தர்களில் பெரும்பாலான குடும்பத்தார், தங்களின், வாரிசுகளுக்கு இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வைத்து முடி காணிக்கை செலுத்துவது வழக்கம். பெரியவர்களுக்கும், நேர்த்தி கடனாக, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வைத்து முடி காணிக்கை செலுத்துவார்கள்.
இப்படி சேகரிக்கப்படும், பக்தர்களின் காணிக்கை முடி, பிறகு ஏலத்தில் விடப்படும். இதேபோல ஏலத்தில் விடுவதற்காக பல மூட்டைகளில் முடி சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், சாக்கு மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த பக்தர்களின் முடி திருடுபோயுள்ளதாக இன்று தகவல் வெளியானது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான முடியின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி என்று கோவில் நிர்வாக வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் பரபரப்ப ஏற்பட்டுள்ளது. இந்த காணிக்கை முடியை, திருடிச் சென்றவர்கள் யாரிடம் அதை விற்பனை செய்ய கூடும் என்பதை யூகித்து அங்கெல்லாம் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.