எம்ஜிஆர், ஜெ.வுக்கு பிறகு மக்களின் அதிருப்தியை சம்பாதித்த அதிமுக... பொன் விழா கொண்டாடுமா?
எம்ஜிஆர் , ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக ஆட்சி மக்களிடம் பெரும் அதிருப்தியை சம்பாதித்துள்ள நிலையில் அக்கட்சி பொன் விழா காணும் வரை இருக்குமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
சென்னை: அதிமுக இன்று 46-ஆவது ஆண்டு விழா கொண்டாடி வரும் நிலையில் அக்கட்சி மீதும், ஆட்சி மீதும் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியால் பொன் விழா ஆண்டை கொண்டாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக என்ற மாபெரும் இயக்கம் தொடங்கி இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்து பணியாற்றிய எம்ஜிஆர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி அதிமுக என்ற கட்சியை தொடங்கினார் எம்ஜிஆர்.
அதன் பின்னர் 1977-ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பதவியேற்றார். 1980, 1984-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெற்றது.
இரண்டான அதிமுக
எம்ஜிஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு 1987-ஆம் ஆண்டு மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அதிமுகவில் ஜெ.அணி, எம்ஜிஆர் மனைவி ஜானகி தலைமையிலான ஜா. அணி என பிளவுப்பட்டது. இதைத் தொடர்ந்து இரட்டை இலைக்கு உரிமைக் கொண்டாடி இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தை நாடியதால் அதிமுகவின் வெற்றிச் சின்னம் முடக்கப்பட்டது.
இரட்டை இலையும் கிடைத்தது
அப்போது நடைபெற்ற தேர்தலின் தோல்விக்கு பொறுப்பேற்று அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க ஜானகி சம்மதித்தார். இதையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக இணைந்தன. பின்னர் 1989-ஆம் ஆண்டு இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை திரும்ப பெற்றன.
ராணுவக் கட்டுப்பாடு
ஜெயலலிதா கடந்த 1991-ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்து முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு சில சரிவுகளும், வெற்றிகளும் மாறி மாறி வந்துக் கொண்டிருந்தன. எனினும் எம்ஜிஆர் இருந்த போது எத்தகைய அளவுக்கு ராணுவக் கட்டுக்கோப்புடன் வைத்திருந்தாரோ அதே அளவுக்கு கட்டுக் கோப்புடன் ஜெயலலிதாவும் கட்சியை வழிநடத்தினார்.
இரட்டை இலை முடங்கியது
உடல்நிலை கோளாறுகளால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த ஆண்டு டிச.5-ஆம் தேதி மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக இரு அணிகளாக பிளவுப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை கோரியதால் தேர்தல் ஆணையம் அந்த சின்னத்தை முடக்கியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் ஒன்றிணைந்தன. தற்போது இரட்டை இலைக்காக தேர்தல் ஆணையத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
மக்கள் விரோத போக்கு
ஆட்சி, பதவிக்கு பயந்து பாஜகவின் நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு மறுப்பு ஏதும் பேசாமல் அதிமுக ஒப்புக் கொள்வதாகவும், மக்கள் பிரச்சினைகளுக்காக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தியதைக் காட்டிலும் ஆட்சி, பதவியை தக்கவைத்து கொள்வதற்காக நடத்தப்பட்ட கூட்டங்களே அதிகம் என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மொத்தத்தில் பொதுத் தேர்தல் எப்போது வரும் என்ற அளவுக்கு மக்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர்.
46-ஆவது ஆண்டுவிழா
இந்நிலையில் அதிமுக தொடங்கி 45 ஆண்டுகள் நிறைவடைந்து 46-ஆவது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தலைமை இல்லாத ஒரு நிலையில் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. பொன் விழா கொண்டாட இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என மக்களின் வெறுப்புகளை அதிமுக ஆட்சி அதிகம் சம்பாதித்துவிட்டதால் அதிமுக பொன் விழாவை கொண்டாடுமா என்ற சந்தேகத்தில் மக்கள் உள்ளனர்.